tamilnadu

img

விவசாயிகளை ஏமாற்றி நான்கு வழிச்சாலையா? பணி ஒப்பந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு சிபிஎம் தலைமையில் விவசாயிகள் போராட்டம்....

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள நான்கு வழிச்சாலை பணி ஒப்பந்த நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர், விவசாயிகள் திங்களன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.சட்டவிதிகளை மீறி, சுற்றுச்சூழல்ஆணையத்தை ஏமாற்றி, விவசாயிகளை மிரட்டி விளைநிலங் களை அபகரித்து விழுப்புரம் முதல்நாகப்பட்டினம் வரை 179 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூபாய் 4 ஆயிரத்து 400 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட பணிக்கு தற்போது கூடுதலாக 2 ஆயிரத்து 500 கோடியை அதிகப்படுத்தியுள்ளனர். 

(ஒரு கிலோ மீட்டருக்கு 40 கோடி) சொற்ப விலைக்கு வாங்கிய விவசாய நிலங்களை அழித்து, அப்பாவி ஏழைகளின் குடியிருப்புகளை மிரட்டி அகற்றிவிட்டு, அவ்வழியாக நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கு அடிப்படை வேலைகள் கடந்த 2017-ல் துவங்கி, விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி அவர்களை ஏமாற்றி, சாலை அமைக்கும் வேலைகள் வேகமாய் நடந்து வருகின்றன. நிலங்களை அபகரித்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுப்பதற்காக விவசாயிகளை மிகவும் கேவலமாக நகாய் அதிகாரிகள் நடத்துவதாக ஆரம்பம் முதலே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள் ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர்.

சுற்றுச்சூழல் ஆணையத்தை ஏமாற்றி, சட்ட விதிகளை காற்றில் பறக்கவிட்டு விழுப்புரம் முதல்புதுச்சேரி, புதுச்சேரி முதல் பூண்டியாக்குப்பம், பூண்டியாக் குப்பம் முதல் சட்டநாதபுரம், சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் என நான்கு பகுதியாக பிரித்து சட்ட விரோதமாக பணிகளை செய்ய துவங்கியது. இதில் கொள்ளிடம் முதல் நாகப்பட்டினம் வரையிலான என்.ஹெச் 45ஏ (NH 45A) சாலை பணிக்குவிவசாயிகளிடம் உள்ள விவசாயநிலங்களை மிரட்டி வாங்கியது.குறிப்பாக கொள்ளிடம், சட்ட நாதபுரம், கோபாலசமுத்திரம், புத்தூர், எருக்கூர், விளந்திடசமுத்திரம், தடாளன்கோவில் பகுதி,செங்கல்மேடு, காத்திருப்பு, நாங்கூர், செம்பதனிருப்பு, அல்லிவிளாகம், இராதாநல்லூர், ஆலங்காடு, சங்கிருப்பு, பூந்தாழை, மாமாகுடி, ஆக்கூர், பண்டாரவடை, ஸ்ரீநகர், நடராஜன்பிள்ளைசாவடி, அன்னப்பன்பேட்டை, திருக்கடையூர், சிங்கானோடை, காழியப்ப நல்லூர், அனந்தமங்கலம், பொறையார் வழியாக அமைக்கப்படவுள்ள நான்கு வழிச்சாலையின் ஒரு பகுதியில் மட்டும் பல லட்சம் ஏக்கர் நிலங்களை அரசு விவசாயிகளிடமிருந்து மிரட்டியும், வலுக்கட்டாயமாகவும் கையகப்படுத்தியது. 

ஆரம்பக் கட்டத்தில் இச்சாலைக்காக எதிர்ப்பு தெரிவித்த பல விவசாயிகள் அரசு நிர்வாகத்தின் மிரட்டல்போக்கால் வேறு வழியின்றி தங்களது வாழ்வாதாரமாக இருக்கும் விளைநிலங்களை அரசிடம் விருப்பமின்றி ஒப்படைத்தனர். இதனிடையே பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்குவழிச்சாலை பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு துரிதமாக நடைபெறும் நிலையில், சட்டநாதபுரம் முதல் நாகை வரையிலான 56 கிலோ மீட்டர் தொலைவிற்கு உட்பட்ட பகுதியில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலங்களுக்கான இழப்பீடுகளை மிக சொற்பமாக வழங்கியுள்ளது.

சதுர அடி 800 ரூபாயிலிருந்து 1000 வரை விற்பனையாகும் சூழலில் வெறும் 3 ரூபாயிலிருந்து 11 வரை மட்டுமே வழங்கியுள்ளது. தங்களின் வாழ்வாதாரத்தை பறித்து விட்டு மிக சொற்பமான சிறு தொகையை ஏற்க முடியாது என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை, கட்டுமான ஒப்பந்த நிறுவனமும், நகாய் அமைப்பும் கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை.விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டியஅரசு அதிகாரிகள் ஒப்பந்த நிறுவனத்தின் குரலை வழிமொழியக்கூடியவர்களாக இருக்கின்றனர். மேலும் சாலை அமையவுள்ள பகுதி யில் உள்ள குடியிருப்புகளுக்குரிய இழப்பீட்டையும் முறையாக வழங்காமல் அடாவடித்தனமாக இடித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையிலும் மேல்முறையீட்டையும் பொருட் படுத்தாமல் சாலை அமைக்கும் பணியை படுவேகமாய் நகாய் அதிகாரிகளின் துணையோடு கட்டுமான நிறுவனம் செய்து வருகிறது. சாலை அமையவுள்ள வழியில் உள்ள கோயில்களை இடித்துவிட்டு வேறு கோவில் கட்ட முடியாது. மாற்று வழியில் சாலையை அமைத்துக் கொள்ளுங்கள் என்ற அறநிலையத்துறையின் கோரிக்கையை பரிசீலிக்கும் அதிகாரிகள், குடியிருப்புகளை இடிக்காதீர்கள் மாற்றுவழியில் அமைத்துக்கொள்ளுங்கள் என்ற ஏழைகளின் கோரிக்கையை ஏற்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விவசாயத்தை அழித்து, விவசாயிகளை ஏமாற்றி, அடியாட்களை வைத்து மிரட்டி குடியிருப்புகளை இடித்துத் தள்ளுகிற நிறுவனத்தை கண்டித்தும், உடனடியாக விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வலியுறுத்தியும், அடியாட்களை வைத்து மிரட்டி குடியிருப்புகளை இடிப்பதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில்மயிலாடுதுறை மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

கடலோர மக்கள் நலவாழ்வு சங்கத்தின் மாநில அமைப்பாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, பாதிக்கப்பட்ட விவசாய நில உரிமையாளர் கூட்டமைப்பு தலைவர் ஏ.ஆனந்தன், துணைத்தலைவர் எஸ்.ராஜராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரை ராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், விவசாய சங்க மாவட்டத் தலைவர் டி.சிம்சன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் ஏ.ரவிச்சந்திரன், கே.பி.மார்க்ஸ் மற்றும் மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.பாதிக்கப்பட்ட விவசாயிகள், மார்க்சிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்று ஒப்பந்த நிறுவனஅலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.பின்னர், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிய பிறகே, சாலை பணிகளை தொடர அனுமதிப்பது என்று மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக உறுதியளித்ததால், போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

;