tamilnadu

img

முழு அரசு மரியாதையுடன் கி.ராஜநாராயணன் இறுதி நிகழ்ச்சி.... சொந்த ஊரான இடைசெவல் கிராமத்தில் நடைபெற்றது....

தூத்துக்குடி:
மறைந்த எழுத்தாளர் கி.ராஜ நாராயணன் அவர்களின் இறுதி நிகழ்ச்சி புதனன்று அவரது சொந்த ஊரான இடைசெவல் கிராமத்தில்  30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை யுடன் நடைபெற்றது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற வரும் கரிசல் இலக்கியத்தின் முன்னோடியுமான  எழுத்தாளர் கி.ராஜநாராயணன் புதுச்சேரி லாசுப்பேட்டை அரசுக் குடியிருப்பில் அவரது இல்லத்தில் மே 17 அன்று  காலமானார்.அவரது உடலுக்கு புதுவை அரசு சார்பில் காவல் துறையினரின் மரியாதை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவரது உடல், அவர் சொந்தஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே  இடைசெவல்கிராமத்திற்கு செவ்வாய்க்கிழமை யன்று இரவு கொண்டுவரப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து மே 19 புத னன்று பிற்பகல் 12.30 மணியளவில் அரசு மரியாதையுடன் அவரது உடல்வீட்டிலிருந்து ஊர்வலமாக கி.ராஜ நாராயணனின் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது  உடலுக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் , தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்கண்டேயன், சதன் திருமலைக்குமார், ரகுராமன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரைவையாபுரி உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் எழுத்தாளர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து காவல்துறை யினர் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளித்தனர். பின்னர்  கி.ராஜநாராயணன் உடல் தகனம் செய்யப்பட்டது.

கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், சமகால எழுத்தாளர் ஒருவர் உயிரிழந்ததற்கு அரசு மரியாதை முதன்முதலாக செலுத்தப்பட்டுள்ளது. கோவில் பட்டியில் அவருடைய சிலை அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதற்கு எழுத்தாளர் என்ற முறையில் நன்றி தெரிவிக்கிறேன். அவருடைய இறுதிக்காலம் வரை வட்டார வழக்கு மொழியில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து பல்வேறு எழுத்தாளர்கள் வட்டார மொழியில் கதைகள் உள்ளிட்டவை எழுதிக் கொண்டிருப்பதன் மூலம் நம்மிடையே தொடர்ந்து அவர் இயங்கி வருகிறார் என்று தெரிவித்தார்.

;