tamilnadu

img

தொழில் வளர்ச்சி நிறுவனத்தை தூத்துக்குடியிலிருந்து மாற்றக்கூடாது... துடிசியா கோரிக்கை....

தூத்துக்குடி:
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தை தூத்துக்குடியிலிருந்து மாற்றக்கூடாது என்று துடிசியா, மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக துடிசியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடியில் மத்திய அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனம் 1983ம் ஆண்டு முதல் தென்மாவட்டங்களுக்கு தலைமை இடமாகசெயல்பட்டு, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதிலும், தொழிற்சாலைகள் சம்பந்தப்பட்ட பயிற்சி வகுப்புகளை நடத்தியும், புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அந்நிறுவனத்தின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் விதத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அதில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனம் சார்பாக தென்மாவட்டங்களில் உற்பத்தியாகும் மற்றும் ஏற்றுமதியாகும் உணவு பொருட்களை பரிசோதிக்கும் நிலையம் அமைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.ஆனால் திடீரென்று எந்தவித முன் அறிவிப்புமின்றி எங்களை போன்ற சங்கங்கள் யாரிடமும் கருத்துக்களைக் கேட்காமல் இந்நிறுவனத்தை மதுரைக்கு மாற்றம் செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி மாற்றியமைத்தால் அது தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஒரு பெரிய இழப்பாகும். ஆகவே தாங்கள் இந்த நிறுவனத்தைமாற்றக்கூடாது என்று சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சிபாரிசு செய்து இவ்வலுவலகம் தொடர்ந்து தூத்துக்குடியிலே இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

;