திருத்துறைப்பூண்டி, நவ.6- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பருத்தி சேரி கிராமத்தில் அமைந்துள்ள பிரில்லியன்ட் கல்வியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை புத்தக வெளியீட்டு விழா மற்றும் வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் எழுதிய ‘நீதியின் குரல்’ புத்தகத்தை கல்லூரியின் செயலர் முத்தலிப் வெளியிட, வழக்கறிஞர் அரசு.தாயுமானவன் பெற்றுக் கொண்டார். வழக்கறிஞர் இன்குலாப் வாழ்த்துரை வழங்கினார். வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி ‘புத்தக வாசிப்பு’ குறித்து பேசினார். எழுத்தாளர் ஐ.வி.நாகராஜன் பேசுகையில் “சமுதாய விலங்காய் வாழும் மனிதர்களை புத்தக வாசிப்பு மட்டுமே செம்மைப்படுத்தும், வருங்கால ஆசிரியர்களான நீங்கள் நூல்கள் வாசிப்பதனால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்” என்றார். இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.