அவினாசி அருகே குட்டையில் விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் நம்பியாம்பாளையம் அருகே கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் மதன்குமார் (11). அவர் அவிநாசி அருகே ராக்கியாபாளையம் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று மதன் குமார் கரைப்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான குட்டையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மதன்குமார் நீரில் மூழ்கியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறை வீரர்கள் நீரில் மூழ்கிய சிறுவனை மீட்க முயன்றனர். இருப்பினும் சிறுவன் மதன்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதையடுத்து மதன்குமார் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.