tamilnadu

img

மன்னார்குடியில் புத்தகத் திருவிழா துவங்கியது

மன்னார்குடி, ஆக.9- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பத்து நாட்கள் நடைபெறவிருக்கும் புத்த திருவிழா வெள்ளியன்று துவங்கியது. திருவிழா நடைபெறும் மன்னார்குடி வடக்கு வீதி ஏ.கே.எஸ் மண்டபத்தில் புத்தக கண்காட்சி நடைபெறும் அரங்கை மன்னார்குடி கோட்டாட்சியர் த.புண்ணிய கோட்டி திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சிக்கு மிட்டவுன் ரோட்டரி அமைப்பின் தலைவர் க.ரமேஷ் தலைமை ஏற்றார். நூலக தந்தை எஸ்.ஆர்.ரெங்கநாதன் மற்றும் மாட்டுவண்டி மூலம் ஊர் ஊராக புத்தகங்களை எடுத்துச் சென்று கிராம மக்களும் படித்தறிய அருஞ் சேவையாற்றிய பொறியாளர் மேலவாசல் கனகசபை பிள்ளை உருவப் படத்திற்கு திருவாரூர் மாவட்ட நூலகர் இரா.ஆண்டாள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை நூலகர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மன்னார்குடி கிளைச் செயலாளர் த.செல்வகுமார் வரவேற்றார். பின்னர் மேலவாசல் கனகசபை பிள்ளையின் நூலக மாட்டு வண்டி சின்னத்தை புத்தக திருவிழா 2019 மற்றும் எதிர்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறவிருக்கும் புத்தக திருவிழாக்களின் நிரந்தர சின்னமாக விழா மேடையில் அறிவிக்கப்பட்டது.  புத்தக கண்காட்சியை துவக்கி வைத்து பாரதி புத்தகாலயத்தின் மேலாளர் நாகராஜன் துவக்கவுரையாற்றினார். புத்தக கண்காட்சி விற்பனையின் துவக்க முதல் பிரதிகளை மாவட்ட கல்வி அலுவலர் இரா.மணிவண்ணன் வெளியிட்டு உரையாற்றினார்.  துவக்க முதல் புத்தகங்களை காவிரி ரெங்கநாதன் மற்றும் மருத்துவர் வி.பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டனர். புத்தக திருவிழா சிறக்க அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் யு.எஸ்.பொன்முடி காப்பீட்டுக் கழக தஞ்சை கோட்ட பொதுச் செயலாளர் வி.சேதுராமன் அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் கு.விவேகி  உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். நிகழ்ச்சி நிறைவில் அறிவியல் இயக்க மன்னார்குடி தலைவர் டி.இமானுவேல் நன்றி கூறினார். கண்காட்சியில் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டின் முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் பதிப்பகத்தார் தங்களின் அரங்கை நிர்மானித்திருந்தனர். துவக்க நிகழ்ச்சியில் பொது மக்கள் உள்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.