அம்புலி ஆற்றில் மணல் திருட்டு
தஞ்சாவூர், மே 6-பேராவூரணி அருகே அம்புலி ஆற்றில் தொடர்ந்து நடந்து வரும் மணல் திருட்டை தடுக்க வேண்டும் எனகோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பேராவூரணி வட்டாட்சியருக்கு சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியம்அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஒன்றியப் பொருளாளர் ஊமத்தநாடு கா.பெரியசாமி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:‘‘தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஊமத்தநாடு ஊராட்சி பெரியகத்திக்கோட்டை என்ற இடத்தில் அம்புலி காட்டாற்றில் நீண்ட நாட்களாக மணல் திருட்டு நடைபெறுகிறது. இதில் ஜேசிபி, ஹிட்டாச்சி போன்ற இயந்திரங்களை பயன்படுத்தி கனரக வாகனங்கள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர். இதனை தட்டிக் கேட்கும் நபர்களை கொலை மிரட்டல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து நேரடியாக ஆய்வு செய்து, சமூக விரோத கும்பல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவின் நகல் முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமைச் செயலாளர், மாவட்டஆட்சியர், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம்
திருவாரூர், மே 6-தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் கூட்டம் தலைவர் டி.அண்ணாதுரை தலைமையில் திருவாரூரில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் ஆர்.ரமேஷ் வரவேற்புரை வழங்கினார். பொருளாளர் எஸ்.நாகராஜன், சமசர குழுத் தலைவர் எஸ்.அருள், அமைப்புச் செயலர் அழகிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாகுல் ஹமீது, ஜெகவீரபாண்டியன், சட்டஇயக்குநர் விஜயபூபாலன், விவசாய இயக்குநர் செல்வகுமார், மஞ்சுளா வேலவன், தர்மதாஸ், கே.ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இணைச் செயலாளர் காளிமுத்து நன்றி கூறினார்.கூட்டத்தில், தொலைத்தொடர்பு ஆணைய வழிகாட்டலை மறந்து உரிய சேவையை வழங்காத பிஎஸ் என்எல் நிர்வாகத்தினை கண்டித்து ஆர்ப்பாட்டம் மே 14 ஆம் தேதி நடைபெறும் உள்ளிட்டவை தீர்மானிக்கப் பட்டது.
கொருக்கை கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
திருவாரூர், மே 6-திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கொருக்கை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2019-20 கல்வி ஆண்டில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மே 10 ஆம் தேதிக்குள், முதலாம் ஆண்டு சேர்க்கை மே 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு +2 வகுப்பில் கணிதம் அல்லது அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஐடிஐ இரண்டு ஆண்டு பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். முதலாமாண்டு சேர்க்கைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ச.நாகேந்திரபிரசாத் தெரிவித்துள்ளார்.