தஞ்சாவூர் ஆக.23- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள், நகரில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள முடச்சிக்காடு கலைஞர் நகரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், 26 கி.மீ தொலைவில் உள்ள அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரிக்கும் சென்று கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிகள், கல்லூரி மற்றும் அலுவலக ங்களுக்கு பணிக்கு செல்வோர் தனியார் மற்றும் நகரப் பேருந்துகளில் பயணி க்கும் நிலையில், காலை, மாலை நேரங்களில், பேருந்தில் இட நெருக்கடி காரணமாக ஆபத்தான முறையில் படியில் தொங்கியவாறு பயணம் செய்து வருகின்ற னர். இதுகுறித்து இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்த்சாமி கூறுகையில், "பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், போதிய பேருந்து இல்லாததால் இடநெருக்கடி காரணமாக படியில் தொங்கியவாறு பயணிக்கின்றனர். மேலும் பேருந்து நெருக்கடி காரணமாக மாணவிகள் பல்வேறு பாலியல் சீண்டலுக்கு ஆளாகின்றனர். பல இடங்களில் நெருக்கடி காரணமாக மாணவ, மாணவிகளை பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்லாமல் விட்டுச் செல்கின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்வோர் உரிய நேரத்திற்கு கல்வி நிலையங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இதே நிலைதான் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், இதுகுறித்து உரிய ஆய்வு செய்து, தேவைப்படும் இடங்களில், காலை, மாலை நேரங்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும்" என்றார். மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.