tamilnadu

img

பொன்னமராவதி கலவரம்: மேலும் ஒருவர் கைது

பொன்னமராவதி கலவரத்தில் நேற்று வசந்த், செல்வக்குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஒரு சமூகத்தினரை, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இருவர் தவறாகச் சித்திரித்துப் பேசும் வகையிலான வீடியோ ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் பெண்களை இழிவுபடுத்திப் பேசுகின்றனர். இதனால், கொதிப்படைந்த பாதிக்கப்பட்ட அந்தச் சமூகத்தினர், வீடியோ வெளியிட்டவர்களை உடனே கைது செய்யக்கோரி பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து, ஏப்ரல் 19-ம் தேதி காலை பொன்னமராவதி காவல்நிலையம் முன்பு திரண்ட ஆயிரக்கணக்கானோர் காவல் நிலையத்துக்குள் கல்வீச்சு தாக்குதல் நடத்தினார். நிலைமை தீவிரமடையவே, வானத்தை நோக்கி இரு முறை போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். தடி அடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். பொதுமக்கள், போலீஸார் என இரு தரப்பிலும் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து சட்டம்- ஒழுங்கு பிரச்னையைக் கருத்தில்கொண்டு, பொன்னமராவதி தாலுகாவில் உள்ள 49 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் பல்வேறுகட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக, பொன்னமராவதி திருக்கலம்பூரைச் சேர்ந்த கருப்பணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோ மற்றும் அன்பழகன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதேபோல், தஞ்சாவூர் போலீஸாரும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். வழக்கு தொடர்பாக, வாட்ஸ்அப் தலைமை அலுவலகத்திடம் தகவல்கள் கேட்டிருந்தனர். இதையடுத்து வீடியோ வெளியிட்டதாக, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கரிசல்காடு பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் செல்வக்குமார் (34) என்பவரை போலீஸார் வெள்ளியன்று கைது செய்தனர். செல்வக்குமார் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்தபோது பொன்னமராவதி போலீஸார் பிடித்தனர். 

போலீஸார் விசாரணையில், ``செல்வக்குமார் சிங்கப்பூரில் கடந்த சில வருடங்களாக வேலை செய்து வந்துள்ளார். சிங்கப்பூரில் வேலை செய்யும் தனது சமூகத்தைச் சேர்ந்த மற்ற நண்பர்களுடன் சேர்ந்து, கடந்த 14-ம் தேதி சிங்கப்பூர் வெஸ்ட் லைட் பகுதியிலிருந்து சர்ச்சைக்குரிய அவதூறு வீடியோவை வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வீடியோவை முதலில் தன் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். தொடர்ந்து, கடந்த 17-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மூலம் அடுத்தடுத்து வைரலாகப் பரவியுள்ளது. தஞ்சாவூர் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தனது சமூகத்தைச் சேர்ந்தவருக்கு ஆதரவு கிடைப்பதற்காக, தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களையே தவறாகச் சித்திரித்து வாட்ஸ்அப் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வசந்த் (30) வெள்ளியன்று கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்நிலையில் இன்று காலை சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த சத்தியராஜ் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சத்தியராஜிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.