பெரம்பலூர், மே 23-நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட மொத்தம் 32 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர், அதிமுக வேட்பாளர் சிவபதி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் முத்துலட்சுமி, நாம் தமிழர் கட்சி வேட்பாள் சாந்தி, எழுச்சி தமிழர் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகரன், சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 19 பேர் இறுதி போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கினர்.பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 13,91011 வாக்காளர்கள் வாக்களிக்க 1644 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப் பதிவு நாள் அன்று மொத்தம் 10 லட்சத்து 94 ஆயிரத்து 644 வாக்குகள் பதிவானது. பின்னர் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பெரம்பலூரிலுள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நாளான வியாழன்று அரசியல் கட்சி முகவர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன.இதில் ஐஜேகே கட்சி நிறுவனர் பாரிவேந்தர் மாலை 6 மணி வரையில் 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி கணிமாக சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஐஜேகே மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.