தஞ்சாவூர், ஜூலை 28- மருத்துவக் கல்வியில் “எக்ஸிட்” தேர்வை புகுத்து வதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலி யுறுத்தி தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.எம்.ஹரிகணேஷ் தலைமை வகித்து பேசியதாவது: “மத்திய அரசு இந்திய மருத்துவக் கழகத்தை ஒழித்து விட்டு, அதற்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க முடிவு செய்துள் ளதை கைவிட வேண்டும். மருத்துவ மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பின் இறுதி ஆண்டில் “நெக்ஸ்ட்” (National Exit Test) என்ற தேசிய தகுதித் தேர்வை புகுத்த முடிவு செய்துள்ளது. இது உள்நோக்கம் கொண்டது. தேர்வு நடத்தும் தனியார் நிறுவனங்களுக்கு லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டது. இத்தேர்வு மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சிக் கோட் பாட்டிற்கும் எதிரானது. தற்போது நடைமுறையில் உள்ள தேர்வு முறைகளே தொடர வேண்டும். எனவே, மாநில உரிமைகளுக்கு எதிரான எக்ஸிட் தேர்வை உடனடியாக கைவிட வேண்டும்” என்றார். ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.