tamilnadu

நாகர்கோவில் மற்றும் இடுக்கி முக்கிய செய்திகள்

பூர்விகா மொபைலில் சேவை குறைபாடு இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

நாகர்கோவில், மே 26-குமரி மாவட்டம், வில்லுக்குறி புன்னக்காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் வி.கோபாலகிருஷ்ணன், இவர் தக்கலை பூர்விகா மொபைல்ஸிலிருந்து ரூ.4 ஆயிரத்து 500 மதிப்பிலான, 2 சிம் கார்டு வசதி கொண்ட செல்போனை வாங்கியுள்ளார். ஓராண்டு உத்தரவாதம் உள்ள அந்த போன் வாங்கிய போதே 1 சிம் செயல்படாமல் இருந்தது. இது குறித்து கடையில் தெரிவித்தபோது, அவர்கள் நாகர்கோவிலில் உள்ள பழுது நீக்கும் மையத்தில் சென்று சரிசெய்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். பழுதுநீக்கும் மையத்தை அணுகிய போது அவர்கள் பழுதுநீக்குவதற்கு கட்டணமாக ரூபாய் 450 வாங்கியுள்ளனர். 10 நாள்களுக்கு பின்னர் சென்று செல்போனை கேட்ட போது போனை சரிசெய்ய முடியாது என்றும், செல்போன் நிறுவனத்துக்கு அனுப்பி பணம் பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளனர்.மேலும் அவரது செல்போனில் இருந்து மற்றொரு சிம் கார்டும் செயல் இழந்துள்ளது. இதனால் மன வேதனை அடைந்த கோபாலகிருஷ்ணன் இது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ஆர்.நாராயணசாமி, உறுப்பினர்கள் சங்கர், எஸ்.சரஸ்வதி ஆகியோர் பூர்விகா மொபைல் விற்பனை நிறுவனம் மற்றும் பழுதுநீக்கும் மையம் மற்றும் செல்பேசி உற்பத்தி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட கோபாலகிருஷ்ணனிடமிருந்து செல்போனை பெற்றுக்கொண்டு அதன் விலை ரூபாய் 4 ஆயிரத்து 500, பழுதுநீக்கும் மையத்தில் பெற்ற ரூபாய் 450ஐ திரும்ப வழங்கவும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 5 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூபாய் 3 ஆயிரமும் 1 மாதத்துக்குள் வழங்க வேண்டுமென்றும் கால தாமதம் ஏற்பட்டால் அத்தொகைக்கு 6 சதவீத வட்டியும் வழங்கப்படவேண்டும் என உத்தரவிட்டனர்.

அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை 

இடுக்கி மாவட்டத்தில் மட்டும் புதிதாக 13,080 பேர்

இடுக்கி, மே 26-பொதுக்கல்வியை பாதுகாப்பதில் கேரள அரசு பல முன்மாதிரிகளை படைத்து வருகிறது. நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள், அடிப்படை வசதிகளுடன் ஆரோக்கியமான கல்விச்சூழல் அங்குள்ள பள்ளிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசின் நடவடிக்கைகளோடு அம்மாநில மக்கள் கரம் கோர்த்து செயல்படுவதால் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டு துவங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் இடுக்கி மாவட்டத்தில் மட்டும் இதுவரை (மே.25) 13 ஆயிரத்து 80 மாணவ மாணவியர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 3 ஆயிரத்து 279 பேர் கூடுதல் சேர்க்கையாகும். தொடர்ந்து அதிக அளவில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒன்றாம் வகுப்பில் மட்டும் 4ஆயிரத்து 451 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 முதல் 7 வரையிலான வகுப்புகளில் 5ஆயிரத்து 350 மாணவர்களும், உயர்நிலை வகுப்புகளில் 3ஆயிரத்து 279 மாணவர்களும் புதிதாக சேர்ந்துள்ளனர். பொதுக்கல்வியின் சிறப்பை புரிந்துகொண்ட பெற்றோர் அரசு உதவி பெறும் பள்ளிகளை கைவிட்டு தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சுயநிதி பள்ளிகளிலிருந்து 570 மாணவ மாணவிகள் பொதுப்பள்ளிகளுக்கு வந்துள்ளதாக பொதுப்பள்ளி (அரசு) பாதுகாப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.பினுமோன் தெரிவித்தார். பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்களே உள்ளதால் இன்னும் கூடுதலான மாணவர்கள் அரசுப்பள்ளிகளுக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.