tamilnadu

img

கஜா புயல் வாழ்வாதார தொகுப்புத் திட்ட பணிகள் ஆய்வு

தஞ்சாவூர், ஜூலை 6 - கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கஜா வாழ்வாதார தொகுப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.  அவ்வகையில் பேராவூரணி வட்டாரத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னந்தோப்புகளில், ஊடுபயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க, ஒரு ஹெக்டேருக்கு ஒரு லட்சத்து ஓராயிரத்து பன்னிரெண்டு ரூபாய் (ரூ 1,01,012) மானியமாக வழங்கப்படுகிறது. அதற்கென பேராவூரணி வட்டாரத்திற்கு மூன்று கோடியே அறுபத்தி இரண்டு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விவசாயிகள் பதிவு செய்து சொட்டுநீர் பாசனம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  சென்னை வேளாண்மை கூடுதல் இயக்குநர் சங்கரலிங்கம், பேராவூரணி வட்டாரத்தில் வியாழக்கிழமை இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து  நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பேராவூரணி வட்டாரத்தில் இதுவரை சொட்டுநீர் பாசனம் அமைத்த விவசாயிகளின் விவரங்களை கேட்டறிந்தார்.  சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் என்பதால் சிறு, குறு விவசாயி சான்று பெறுவதற்கான பணிகளை விரைந்து முடித்து பேராவூரணி வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளையும் இத்திட்டத்தில் பயன்பெற ஆவன செய்ய வேண்டுமெனவும், நுண்ணீர் பாசனத் திட்ட பணிகளை அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு சென்று பணிகளை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டுமெனவும்  வேளாண் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  பின்னர் காலகம் கிராமத்தில் விஜயகுமாரி என்பவரது தென்னந்தோப்பில் சொட்டு நீர்பாசன நிர்மான பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டார்.  தஞ்சாவூர், வேளாண்மை இணை இயக்குநர் க.நெடுஞ்செழியன், வேளாண்மை துணை இயக்குநர் அ.ஜஸ்டின், பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மாலதி, வேளாண்மை அலுவலர் எஸ்.ராணி மற்றும் வேளாண்மை உதவி அலுவலர் தி.ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.