tamilnadu

img

பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி/கும்பகோணம், ஆக.28- திருச்சி வருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் கடந்த 5 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். இபிஎப், இஎஸ்ஐ முறையாக கட்ட வேண்டும். பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை குறைக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல்இயு மற்றும் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் புதனன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், பிஎஸ்என்எல்இயு மாவட்டச் செயலாளர் அஸ்லம்பாஷா, பிஎஸ்என்எல் ஓய்வு பெற்றோர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சின்னையன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் முபாரக் அலி வரவேற்றார். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் கல்லடியான் நன்றி கூறினார்.
கும்பகோணம்
தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கடந்த ஆறு மாதமாக சம்பளம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கும் பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளாகியுள்ளனர். இது சம்பந்தமாக பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை பிஎஸ்என்எல்லில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஆறு மாத சம்பளம் வழங்கப்படவில்லை. அதனை உடனே வழங்கக் கோரி பிஎஸ்என்எல் கும்பகோணம் மாவட்ட  ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் கும்பகோணம் காந்தி பார்க் முன்பு தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி.ராமச்சந்திரன், பாலாஜி ஆகியோர் தலைமை வகித்தனர். பிஎஸ்என்எல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.மதியழகன், ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் நித்தியானந்தம் ஆகியோர் போராட்ட விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச் செயலாளர் சின்னை. பாண்டியன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் கண்ணன், போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஜி.மணிமாறன், அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் எம்.சாந்தாராமன், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜகோபாலன், வட்டச் செயலாளர் பழ.அன்புமணி, எல்ஐசி கோட்ட துணைச் செயலாளர் சேகர் மற்றும் சகோதர சங்க நிர்வாகிகள் உரையாற்றினர்.