மதுரை, மே 22- இரத்தக் கசிவு, இரத்தச் சோகை நோய்கள் வராமல் இருக்கச் சொந்தத்தில் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் ராஜா தெரிவித்தார்.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, ஹிமோபிலீயா அமைப்பு இணைந்து இரத்தக் கசிவு (ஹிமோபிலீயா) மற்றும் இரத்தச் சோகை (தலசிமியா) நோய்கள் தினம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அரங்கில் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நோய் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகள் பலூன்களைப் பறக்கவிட்டனர்.தொடர்ந்து, மருத்துவக் கண்காணி ப்பாளர் ராஜா பேசியதாவது:- (ஹிமோபிலீயா) இரத்தக் கசிவு மற்றும் (தலசிமியா) இரத்தச் சோகை நோய்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்க்கும் போது மிகவும் கவலையளிக்கிறது. இந்தக் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு தெரியாத வகையில் பெற்றோர்கள் வளர்க்க வேண்டும். நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து வகையான மருத்துவச் சிகிச்சைகளையும் அரசு தொய்வின்றி வழங்கி வருகிறது. சொந்தத்தில் திருமணம் செய்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தநோய் தாக்குகிறது. நோய் வராமல் தடுக்க வேண்டுமானால் சொந்தத்தில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார். இந்திய குழந்தைகள் நலத்துறை மாவட்டத் தலைவர் சண்மூகசுந்தரம் பேசுகையில், இரத்தக் கசிவு, இரத்தச்சோகை நோய்களால் தாக்கப்பட்ட குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெறவேண்டிய நிலை உள்ளது. அவர்கள் வாழும் காலங்களில் நம்பிக்கையுடன் இருக்க நவீன மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை தெரிவிக்கவும், நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் சராசரி மனிதர்களைப் போல் வாழ்க்கையை தொடர்வதற்கும், ஆண்டுதோறும் நோய்களின் பெயரால் தினங்கள் கொண்டாடப்படுகிறது. இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனி வார்டு உள்ளது. இங்கு சிறந்த மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.