தருமபுரி, ஆக.7- ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுப்பதற்கு, வர்ணாசிரம கொள்கையை கடைபிடிப்பதே காரணம் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் சூழ்நிலையில், இந்தியா முழுவதும் 433 பேர் இறந்துள்ளதாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் தெரிவித்துள்ளார். நாகரீக உலகத்தில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் தொடர்கிறது. பூனே முதல் மும்பை வரை புல்லட் ரயில் விடும் இச்சூழலில் மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது வெட்கக்கேடானது. மனித கழிவுகளை அகற்ற, கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்ய இயந்திரத்தை பயன்படுத்த நிதி இல்லை என்று ஒன்றிய அரசு கூறுகிறது. இத்தொழில் செய்யும் குடும்பத்தில் உள்ள இளைஞர்களின் மாற்று வேலை வாய்ப்பு குறித்து ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு அரசு கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்ய, செப்டிக் டேங்குகளை செய்ய இயந்திரங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருந்ததியர் மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. கட்சியின் மறைந்த முன்னாள் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் இக்கோரிக்கையை அரசுக்கு முன்வைத்தார். அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி, அதை சட்டமாக இயற்றினார். தற்போது, அருந்ததியர் மக்களின் உள் இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு என்பது ஏமாற்று வேலை. பட்டியலின மக்களை முன்னேற்றாது. எனவே, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. 2021 ஆம் ஆண்டு நடத்திய சாதிவாரியான கணக்கெடுப்பை பாஜக அரசு வெளியிடவில்லை. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் உரிய இடம் கொடுக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், பாஜக இதனை மறுப்பதற்கு, காரணம் வார்ணாசிரம கொள்கையை கடைபிடிப்பதால்தான். இதனை கைவிட்டு ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி வெளியிட வேண்டும்.
தொடர் மழை காரணமாக கர்நாடகா அணைகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டு காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 70 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. கார்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் வழங்கவில்லை. ஆனால், மழை பெய்தவுன் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் மொத்தமாக தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. கர்நாடக அரசு மழைக்கு முன்னரே படிப்படியாக தண்ணீரை திறந்து விட்டிருந்தால், தமிழ்நாட்டில் விவசாயம் செழித்திருக்கும். மொத்தமாக திறந்துவிட்டதால் உபரிநீர் கடலில் வீணாக கலக்கிறது. எனவே, தமிழக அரசு தருமபுரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதேபோல் காவிரி - குண்டாறு இணைப்புத்திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும்.
தருமபுரியில் இஸ்லாமிய இளைஞர் பட்டியலின பெண்ணை காதலித்ததால், அப்பெண்ணின் சகோதரர்களால் ஆணவப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இந்த ஆணவப்படுகொலை நடந்துள்ளது. இது மனித நாகரீகத்திற்கு விரோதமான செயல். இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. எனவே, உடனடியாக ஆணவப்படுகொலைகளை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
வேலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முதியவரின் உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்வது போன்று காணொளி வெளியாகியுள்ளது. இறந்தவரின் உடலை ஆம்புலன்ஸ் வைத்து வீட்டிற்கு எடுத்த செல்ல பொருளாதார வசதி இல்லாத நிலை உள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அமரர் வாகனத்தை வழங்க வேண்டும்.
பாஜகவின் மாநில நிர்வாகி ராமலிங்கம், தமிழ்நாட்டை 3 ஆக பிரித்தால் தான் ஒன்றிய அரசு நிதி வழங்கும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு வளர்ந்த மாநிலம் என்றாலும் வளர்ச்சித்திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்குவதில்லை. குறிப்பாக, மெட்ரோ 2 ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. இதனை தமிழ்நாட்டிலுள்ள 8 கோடி மக்களும், மாநில முதல்வரும் கண்டித்துள்ளார். எனவே, தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும் என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன், மாவட்டச் செயலாளர் ஏ.குமார் ஆகியோர் உடனிருந்தனர்.