tamilnadu

img

’விவசாய தற்கொலைகள் குறைவாகவே வெளிவருகிறது’

இன்றைய சூழலில், விவசாய பிரச்சனைகள் மற்றும் இதன் விளைவாக ஏற்படும் விவசாயிகளின் தற்கொலைகள் ஆகியவை குறைவாகவே வெளி வருகிறது என்று அகில இந்திய கிசான் சபையின் இணை செயலாளர் விஜூ கிருஷ்ணன் ஆத்ரேயாவின் புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் பி ஆத்ரேயாவின் ’கிராமப்புற இந்தியா எங்கே? சமகால இந்தியாவில் விவசாய மாற்றத்தின் அரசியல் பொருளாதாரம்  (’Whither rural India? Political economy of agrarian transformation in contemporary India’) என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் நடைபெற்றது. இந்த புத்தகம், ஆத்ரேயாவின் வழிகாட்டுதலின் கீழ் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள், கடந்த 2016-ஆம் நடந்த ‘பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு வேளாண்மை மற்றும் கிராமப்புற இந்தியா’ என்ற கருத்தரங்கில் வழங்கப்பட்ட 12 கட்டுரைகளின் தொகுப்பாகும்.

இந்த நிகழ்வில் பேசிய விஜூ கிருஷ்ணன், ”மகாராஷ்டிராவில் கடந்த நான்கு மாதங்களில் கிட்டத்தட்ட 800 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதே போல், அனந்த்பூர் பகுதியில், கடந்த ஒரு மாதத்தில், 8 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.     

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாசிக்கில் இருந்து மும்பை வரை விவசாயிகள் மேற்கொண்ட நீண்ட அணிவகுப்பின் போது கூட, விளைபொருட்களுக்கான விலை குறைப்பு மற்றும் கடன் தள்ளுபடி ஆகிய பிரச்சினைகள் குறித்து மட்டுமே ஊடகங்கள் முன்னிலைப்படுத்தியது. ஆனால் ஏழை விவசாயிகளின் உணவு பற்றாக்குறையை குறித்து பேசப்படவில்லை” என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் பேசுகையில், ”ஆத்ரேயா ஒரு அறிஞர் மட்டுமல்ல, பொருளாதாரம் பேராசிரியராகவும், அரசியல் பொருளாதாரத் துறையில் முக்கிய பங்களிப்பதோடு, மார்க்சின் 'மூலதனம்' குறித்த அறிவின் களஞ்சியமாகவும், இந்தியா சூழலில், நீதிக்கான அடிப்படை கூறுகளில் தீவிர புலமை வாய்ந்தவராகவும் திகழ்கிறார்” என்று தெரிவித்தார்.

மேலும் அறிவொளி இயக்கம் மூலமாக எழுத்தறிவு விகிதத்தை உயர்த்தியது மற்றும் பாலினம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட ஆத்ரேயாவின் பங்களிப்பு மற்றும் சாதாரண மக்களை அணுகக்கூடிய வகையில் அவரின் எழுதும் திறன் குறித்து பேசினார் என்.ராம், ”இந்த வயதிலும் ஆத்ரேயாவின், இது போன்ற தெளிவான பங்களிப்புகளுக்கு மேலும் இடம் வழங்கப்பட வேண்டும்” என்றார். ஆத்ரேயாவின் குறிப்பிட்ட சில புத்தகங்கள், ஆன்லைனிலும் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதை தொடர்ந்து விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசுகையில், புத்தகத்தில் உள்ள கண்டுபிடிப்புகள், விவசாயக் கொள்கைகளில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும், குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டமானது, அதிக திறன் சார்ந்தாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், ஆத்ரேயாவின் எளிமையை பாராட்டிய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷீலா ராணி சுங்கத் சாதி, வர்க்கம் மற்றும் பாலின அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளின் அனைத்து பரிமாணங்களில் இருந்தும் அப்பாற்பட்டவர் என்று கூறினார்.


 

;