tamilnadu

img

முகிலன் எங்கே? மூண்டெழும் கேள்விகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காவல்துறையினர் சிலர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்த நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டை ஒட்டி கலவரச் சூழல் உண்டாக்கப்பட்டதில் காவல்துறையினருக்கும் பங்கிருக்கிறது  என்ற குற்றச்சாட்டுகளுடன், அந்த போராட்டம் தொடர்பான தீவைப்பு சம்பவத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் வேதாந்தா நிறுவனத்திற்கும் தொடர்பு இருக்கிறது; கலவரம் செய்தவர்கள் பொது மக்கள் அல்ல. திட்டமிட்டு ஏவப்பட்ட குண்டர்களும் காவல்துறையும்தான் இதற்கு காரணம்என்பதை முன் வைக்கும் காணொலி காட்சிகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பதிவுகளையும் ஆதாரம் காட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தெளிவாக விளக்குகிறார் முகிலன்.அத்தோடு அவர் காணாமல் போனார். அன்றைக்கு மாயமானவர் காவல்துறையால் கடத்தப்பட்டார் என்று முகிலன் குடும்பத்தினர் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதை மறுத்த காவல்துறை தனிப்பட்ட காரணங்களால் முகிலன் தலைமறைவாகியிருக்கலாம் என்ற தகவலை உலாவ விட்டது.

நடந்து என்ன?

துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் துறையின் பின்னணி பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அந்தக் காணொளியில் இருக்கும் நிலையில், அதற்குப் பின்னர் என்ன ஆனார்? எங்கே சென்றார்? என்பதுதான் ‘மர்மம்’. செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு அன்று இரவே ரயில் மூலம் சென்னையிலிருந்து அவசர அவசரமாக புறப்பட்ட அவரை நண்பர் சிலர் சென்னை எழும்பூர் ரயில் நிலையம்வரை சென்று ரயில் ஏற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர் அந்த ரயிலில் பயணிக்க வில்லை. அந்த ரயில் நிலையத்திலிருந்து எப்படி வெளியேறினார்? எங்கே சென்றார்?  யார் கடத்திச் சென்றது என்பது புரியாத புதிராகும்.

தொடர்பு எல்லைக்கு...
 

முகிலன் பயன்படுத்திய அலைபேசி எண் காஞ்சிபுரம் வரைதான் தொடர்பில் இருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் அவர் ரயிலில் பயணிக்கவில்லை என்பது நிரூபணமாகிறது. சென்னையில் திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஒலக்கூர் வரைக்கும் முகிலனின் கைபேசி சிக்னல்  கிடைத்திருக்கிறது. எழும்பூர் ரயில் நிலைய காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு பின்னர் எழும்பூர் எப்-2 காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. திருவல்லிக்கேணி துணை ஆணையரையும் எப்-2 காவல் நிலையத்துடன் இணைந்து சூ-மோட்டோ வாக எடுத்து இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். ஆனால், பொறுப்பான காவல்துறை அதிகாரிகளோ “இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை” என்று நழுவுகிறார்கள்.எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் முகிலன் தொடர்பாக பதிவாகியுள்ளதாக கூறப்படுவதால் அவர் கடத்தப்பட்டிருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. 

விடை கிடைக்குமா?
 

முகிலன் கடத்தப்பட்டது இது முதல் முறையல்ல. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தின் போதும் கடந்த 2012ஆம் ஆண்டில் உளவுத்துறையால் கடத்தி சென்று மூன்று நாட்கள் தலைமறைவுக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.ஆனால், சமூக ஆர்வலர்கள் பல்வேறு அரசியல் கட்சி, அமைப்புகளின் தலைவர்களும், பொதுமக்களும் காவல்துறைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.  இதற்கிடையில் மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றிதிபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றியும், முகிலன் காணாமல்போய் 100 நாட்களை தாண்டியும் அவர் எங்கு இருக்கிறார் எனும் கேள்விக்கு மட்டும் விடை கிடைத்தபாடில்லை. 

என்ன செய்கிறது அரசு?
 

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், மணல் கொள்ளையை எதிர்த்த போராட்டம், அணு உலை, நெடுவாசல் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து நடத்தியதின் பின்னணியில் பலரை  குண்டர் சட்டத்தில் சிறைக்கு அனுப்பியது அதிமுக அரசு. அப்போதும் மக்களுக்கு ஆதரவான இவரின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருந்தது. காணாமல் போன முகிலனை கண்டுபிடிக்கக்கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வந்த நிலையில், சுமார் 40 நாட்கள் கழித்து கரூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றை கொடுக்க, காவல்துறையோ தனது அடுத்த அஸ்திரமாக அந்தப் புகாரை கையில் எடுத்தது. முகிலன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. முகிலன் கடத்தப்பட்டதை திசை திருப்ப ஜோடிக்கப்பட்ட இதுபோன்ற திருகு வேலைகளால் காவல்துறை மீதான கொஞ்ச நஞ்ச நம்பகத் தன்மையும் முற்றிலும் சீர்குலைந்து விட்டதாக முற்போக்காளர்கள் கூறுகின்றனர். முகிலன் கடத்தல் சம்பவத்தில் தமிழகஅரசும் காவல்துறையும் கூட்டு என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். இதில் உண்மை இல்லை என்றால் முதலமைச்சர் எடப்பாடி இவ்வளவு நாட்களாக வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்? அப்படி இல்லை என்றால் காவல்துறை தனது இயலாமையை ஒப்புக்கொள்ள மறுக்கிறதா என்ற ஐயம் தோன்றுகிறது.

மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடிக்க முகிலன் தொடர்பான அலைகள் அடித்துச் சென்று விட்டன. “முகிலன் எங்கே” என்கிற ஆதங்கம்  சமூக வலைதளங்களுடன் நின்றுவிடா மல் பொதுமக்களை வீதியில் இறங்கி கண்டனக் குரல் எழுப்பச் செய்தது. இந்த அதிர்வலைகளால் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதும், முகிலனை கண்டுபிடிப் பதற்கு போலீசாரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறோம். கேரளா, கர்நாடகா என வெளி மாநிலங்களுக்கும் விசாரணையை முடுக்கி விட்டிருக் கிறோம் என்றெல்லாம் நீதிமன்றத்தில் அரசால் தெரிவிக்கப்பட்டது. மேலும் சீலிடப்பட்ட அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூன் மாதம் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெட்டிப் பாம்பாக அடக்கப்பட்டு பரபரப்பு கொஞ்சம் கொஞ்சமாகத் தேயத் தொடங்கி, `அப்படி ஒருத்தர் இருந்தாரா? என்கிற ஆழ்கடலில் அமைதி நிலைக்கு கொண்டு வந்தது. மக்களவை தேர்தலுக்கு பிறகு தற்போது திரும்பவும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பதில் சொல்ல வேண்டியது தமிழக அரசும்,காவல்துறையும்தான்.