tamilnadu

img

இணையவழிக் கல்வி முறையும் சவால்களும் - டி.கே.ரங்கராஜன்

கோவிட் 19 எனப்படும் கொரோனா தீநுண்மியின் பாதிப்பை சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் உணர்ந்து கொண்டுள்ளனர். மிகவும் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியிருப்பது விவசாயமா, சிறு, குறு தொழில் நிறுவனங்களா என்பதை விவாதித்துக் கொண்டி ருக்கிறோம். கோவிட் 19 உருவாக்கியுள்ள சமூக இடை வெளியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கல்வித்துறை என்பதைப் பலரும் உணருவதில்லை.

கடந்த பல வாரங்களாக பள்ளிகள் செயல்படவில்லை. மே 17க்குப் பிறகு என்ன நடக்கும் என்றும் முழுமையாகத் தெரியாது. மாணவர்கள், கல்வி நிலையங்கள், ஆசிரி யர்கள், புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டியுள்ளது. கிராமப்புறம்- நகர்ப்புறம், ஆண்கள், பெண்கள், வசதி படைத்தவர், ஏழைகள் என 21 ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் உலகத்தில், கட்டமைப்பு சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை கோவைட் 19 நோய்த்தொற்று தீவிரமாக்கியுள்ளது.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் கல்வி ஆண்டை ஆகஸ்ட் முதல் தொடங்கி, சேர்க்கைக்கு அனுமதித்திருந்தாலும், அனைத்துக் கல்வி நிலையங்க ளும் மே அல்லது ஜூன் இறுதிவரை மூடப்படலாம். இப்போதும்கூட எப்போது பள்ளிக்கூடங்கள் செயல்படத் தொடங்கும் என்பதை கூறுவது கடினமான ஒன்று. இந்தப் பின்னணியில், சில பள்ளிக் கூடங்களில் கல்லூரிகளில் இணைய வழியில் பாடம் நடத்தும் முறை தொடங்கியுள்ளது. மாணவர்களின் முகம் பார்த்து ஆசிரியர்கள் பாடம் கற்றுக் கொடுக்கும் முறைக்குப் பதிலாக, இணையதள கல்வி கொடுப்பது என்பது நம் நாட்டில் உடனடியாக இயலாத காரியம் என்றே தோன்று கிறது. ஆனால், இணைய வழியில் பாடங்களைப் படிக்கு மாறு பெருமளவில் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பள்ளிக் கூடங்கள் உள்பட 99.9 சதவீத கல்வி மையங்களிலும், பெரும்பாலான கல்லூரிகளிலும் எதுவும் நடக்காமல் ஸ்தம்பித்துள்ளன. இதனால் மாணவர்கள் மத்தியில் கல்வி பெறும் வாய்ப்பில் ஏற்றத்தாழ்வு உருவாகியுள்ளது. குறிப்பாக, கிராமங்களில் இருந்து புலம் பெயர்ந்து, நகர, மாநகரங்களை நோக்கி வந்த ஏழை மாணவர்களின் எதிர்காலக் கல்வி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அவசர அவசரமாக பெற்றோருடன் கிராமங்களை நோக்கிச் சென்ற குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குத் திரும்புவது எப்போது? பள்ளிக்குச் செல்ல முடியாத குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்பி வைத்து அதன் செலவை ஏற்ற நல்ல உள்ளம் படைத்தவர்களையும் கொரோனா தீநுண்மி நோய்த் தொற்று கவலை அடையச் செய்துள்ளது.

இணையவழி வகுப்புகளுக்கான உள்கட்டமைப்புகள் இல்லாதபோது, ஆசிரியர்கள் - மாணவர்கள் இதுவரை சந்திக்காத சவால்களை, நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தொலைதூரக் கற்றலுக்குத் தேவைப்படும் இணைய வழிக் கல்விக்கு மின்சாரம், இணையதளத் தொடர்பு, கணினி, அறிதிறன் பேசி (ஸ்மார்ட் போன்) முதலான வசதிகள் தேவை.

அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பிரதம மந்திரியின் ‘சஹஜ் பிஜ்லி ஹர்கர் யோஜனா’ திட்டம் 99.9 சதவீத வீடுகளுக்கு மின்சா ரம் தருவதாகக் கூறுகிறது. ஆனால், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளும் மின்சாரத்தால் இணைக்கப் பட்டிருந்தாலும், தொடர்ந்து தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறதா என்கிற கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

‘மிஷன் அந்தியோதயா’ திட்டம் தொடர்பாக தேசிய அளவில் கிராமப்புறங்களில் நடத்திய ஆய்வில், ஊரக மேம்பாட்டுத் துறை 2017-18ல் பின்வரும் புள்ளி விவரத்தை அளித்துள்ளது. அதாவது 16 சதவீத வீடுகளில் ஒரு மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது. 33 சதவீத வீடுகளில் 9 மணி முதல் 12 மணி நேரமும், 47 சதவீத வீடுகளில் 12 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) 2017-18 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை யில், கிராமப்புறங்களில் 4.4 சதவீத வீடுகளிலும், நகர்ப் புறங்களில் 23.4 சதவீத வீடுகளிலும் கணினிகள் உள்ளன. அதேபோல கிராமப்புறங்களில் 14.9 சதவீத வீடுகளிலும், நகர்ப்புறங்களில் 42 சதவீத வீடுகளிலும் இணையதள வசதி உள்ளது. நகர்ப்புறங்களிலேயே சரியாக இணையத் தொடர்பு கிடைப்பதில்லை என்கிற நிலைமை காணப்படும் நிலையில், கிராமப்புறங்களின் நிலைமை குறித்துக் கேட்கவே வேண்டாம்.

இணைய வகுப்பு இணைப்புகளை அளிப்பது மத்திய, மாநில அரசுகளுக்கு எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை என்றாலும், இணைய வகுப்புக்கு கணினி அல்லது அறிதிறன் பேசி (ஸ்மார்ட் போன்) தேவை. நம் நாட்டில் 24 சதவீதத்தினரிடம்தான் அறிதிறன் பேசிகள் உள்ளன. 11 சதவீத வீடுகளில்தான் கணினி, மடிக்கணினி, நோட்புக், நெட்புக் முதலானவை உள்ளன. கோவிட் 19 தீநுண்மி நோய்த் தொற்று உலகத்தின் சரிபாதி மாணவர்களை வகுப்பறையிலிருந்து விரட்டி யுள்ளது. 82.6 கோடி மாணவர்களிடம் கணினி வசதி இல்லை. 70.6 கோடி மாணவர்களுக்கு இணையதள வசதி இல்லை என்ற யுனெஸ்கோவின் அறிக்கை, இணையவழி கல்விக்கான சமத்துவமின்மையைக் குறிக்கிறது.

பல்கலைக்கழகங்கள் தங்களின் உறுப்புக் கல்லூரிக ளில் இணைய வகுப்புகளைத் தொடங்க அறிவுறுத்தியி ருந்தாலும், இணைய வேகம் சிறப்பாக உள்ள நகரத்தில் உள்ள மாணவர்கள் மட்டுமே பலனடைந்து வருகின்றனர். இணைய வழியில் தேர்வு என்று ஒன்று நடத்தினால் தொலைதூர கிராமப்புற மாணவர்கள் கலந்து கொள்ள இயலாது. அப்படியே கலந்து கொண்டாலும் தோல்வி அடைவது நிச்சயம் என்கிறார்கள் கல்லூரிப் பேராசிரி யர்கள். தொலைதூர கிராமப்புற மாணவர்களுக்கு அதிவேக இணைய வசதி சாத்தியப்படாத சூழலில், இணையவழி கல்விக்குப்  பயன்படுத்தப்படும் செயலிகள் குறித்த சந்தே கங்களும் எழாமல் இல்லை. ‘செமினாருக்கு’ மாற்றாக ‘வெப்னார்’ எனப்படும் இணையவழி கருத்தரங்கம், ஆலோசனை, கூட்டம் ஆகியவற்றுக்குப் பயன்படும் ‘ஜூம்’ செயலி குறித்த பாதுகாப்பு எச்சரிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளதையும் கவ னத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

கோவிட் 19 உருவாக்கியுள்ள தாக்கம், அனைத்துத் துறைகளிலும் ஆய்வுப் பொருளாக மாறியுள்ளதைப் பார்க்க முடிகிறது. இதன் ஒரு பகுதியாக குழந்தைகளும், பெரியவர்களும் எவ்வாறு அதிநவீன தொலைத் தொடர்பு சாதனங்களைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது என்பது குறித்தும், அது ஏற்படுத்திவரும் மனநல பாதிப்பு கள் குறித்தும் ‘நிம்ஹான்ஸ்’ (பெங்களூர் மனநல அறி வியல் ஆராய்ச்சி மையம்) போன்றவை ஆராயத் தொடங்கியுள்ளன. 45 நாடுகளில் உள்ள முக்கியமான பல்கலைக் கழகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், உயர் கல்விக்கான இணைய வழி வகுப்புகள் ஒருபோதும் வழக்கமான வகுப்புகளுக்கு இணையாகாது எனத் தெரியவந்துள்ளது. பொருத்தமான கற்பிக்கும் முறை கடைப்பிடிக்கப்படும் போதுதான் கற்றல் அனுபவம் மேம்படும்.

தமிழகம், புதுச்சேரி, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள், மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் (1 முதல் 9ஆம் வகுப்பு வரை) மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அறிவித்த நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுகிறார்கள். 9,11 ஆம் வகுப்பு மாணவர்கள், நடப்புக் கல்வியாண்டில் பருவமுறைத் தேர்வு; பயிற்சித் தேர்வு, செய்முறைத் தேர்வு போன்ற மற்ற தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அறிவித்தது. ஜூலை 1 முதல் 15ஆம் தேதி வரை சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புக்கு நடத்த வேண்டிய மீதமுள்ள தேர்வுகள் நடைபெறும் என்றும், இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் அறிவித்துள்ளது.

தேசிய கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டதன் அடிப்படையில், 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத் திட்டத்தின் அளவை சிபிஎஸ்இ மாற்றியுள்ளது. ஆனால், மாநில பாடத் திட்டங்கள் குறித்து பெருத்த மௌனம் நீடித்து வருகிறது.

கொரோனா தீநுண்மி நோய்த்தொற்று காரணமாக கல்விக் கட்டணத்தை தனியார் கல்லூரிகள் வசூலிப்பதற்கு எதிராகத் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்ததுடன், உரிய பல்கலைக்கழகத்திடம் கோரிக்கையை முன் வைக்குமாறும் தெரிவித்துள்ளது கவலையளிக்கிறது. பொது முடக்கம் காரணமாக வேலை இழந்த அல்லது ஊதியம் கிடைக்காத பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி கல்விக் கட்டணம் செலுத்த முடியும் என்பது குறித்து அரசு சிந்தித்தாக வேண்டும். தொலை தூர கற்றல் அல்லது இணையவழி கற்றல் வழக்கமான வகுப்புகளில் கற்கும் அனுபவத்தை ஒரு போதும் தந்துவிட முடியாது. கொரோனா பொது முடக்கக் காலத்தில் ஒரு சிறிய மாற்று முயற்சியாகத்தான் இணைய வழி கல்வியைக் கருத முடியுமே தவிர, வழக்கமான கற்பித்தலுக்கு இது மாற்றாக முடியாது. அதற்கான காலம் இன்னும் கனியவில்லை.

எதிர்காலத்தில் தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சி யில் தொலைதூர கற்றல் அல்லது இணையவழி கற்றலை சமூகத்தின் அனைத்து நிலை மக்களுக்கும் சாத்தியமாக்க மத்திய, மாநில அரசுகள் இப்போது முதலே திட்டமிட வேண்டும். இதற்காக நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகாரிக்க வேண்டும். அப்போது தான், இணையவழிக் கல்வி என்பது ஏழைக் குழந்தைக ளுக்கும் எட்டும் கனியாகும்!

 

;