tamilnadu

img

மோட்டார் வாகன சட்டத்திருத்தம் யாருக்காக? - கே.ஆறுமுக நயினார்

உலகில் சாலை விபத்துக்கள் அதிகம் நடை பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது.  ஒவ்வொரு நாளும் 1275 விபத்துக்கள் ஏற்பட்டு 405 பேர் மரணம் அடைகின்றனர்.  ஒரு மணி நேரத்திற்கு 17பேர் இறக்கின்றனர்.  ஒரு வரு டத்தில் 4,65,000 விபத்துக்கள் ஏற்பட்டு ஒன்றரை லட்சம் பேர் மரணமடைவதுடன், 5 லட்சம் பேர் காயமடைகின்றனர்.  எனவே விபத்தைக் குறைக்க ஒரே வழி மோட்டார் வாகன சட்டத்தை திருத்துவதுதான் என முடிவுசெய்து, அந்த சட்டத்தில் 93 திருத்தங்களை செய்துள்ளது பிஜேபி அரசு. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிஜேபி அரசு இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. மோட்டார் தொழி லாளர்கள் இரண்டு முறை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  எண்ணற்ற போராட்டங்களை நடத்தினர்.  இதன் மூலம் மோட்டார் வாகன சட்டத்தை திருத்தும் மத்திய அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்தினர்.  கடந்த ஆட்சி காலத்தில் செய்ய முடியாததை இப்போது செய்துவிட்டது மோடி அரசு.  மோட்டார் வாகன சட்டம் திருத்தப்பட்டுவிட்டது.

சட்டத்திருத்தம் விபத்தைக் குறைக்குமா?

மோட்டார் வாகனங்களால் எல்லா நாடுகளிலும் அன்றாடம் விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.  பிரிட்டிஷ் இளவரசி டயானாவே கார் விபத்தில்தான் மரணமடைந்தார்.  விபத்தைக் குறைக்க வாகனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்து வது, சாலைகளை மேம்படுத்துவது, பொதுப்போக்கு வரத்தை வலுப்படுத்துவதுதான் உலகம் முழுவதும் மேற் கொள்ளப்படும் நடவடிக்கை.  ஆனால் இதற்கான எந்த விதிகளும் சட்டத்திருத்தத்தில் இல்லை.  அனைத்தையும் தனியார்மயமாக்குவதே சட்டத்திருத்தத்தின் நோக்கம்.

ஆர்.டி.ஓ ஆபிசுக்கு வேலை இல்லை!

அரசிடம் அனுமதி பெற்ற அடிப்படையில் வாகனம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து வாகனங்களுக்கு பதிவு எண் வழங்கப்படும்.  ஆர்.டி.ஓ அலுவலகங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.  ஆனால் இனி அப்படிப்பட்ட ஆய்வே தேவையில்லை.  வாகனம் உற்பத்தியாகி வெளியே வரும்போதே பதிவு எண்ணு டன்தான் வெளியே வரும்.  பதிவு எண் வழங்கும் உரிமையும், வாகனங்களை பதிவுச் செய்யும் உரிமையும் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது.  இதற்கு ஏற்ப பதிவுக் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. (கீழே தனியாக பட்டியல் வழங்கப்பட்டுள்ளது)

ஒரே நாடு, ஒரே லைசென்ஸ்

ஒரே நாடு, ஒரே தேர்தல் வரிசையில் ஓட்டுநர் உரிமமும் சேர்ந்துவிட்டது.  தற்போது உரிமம் பெற்றுள்ள அனைவரும் இனி  புதிய உரிமம் பெற வேண்டும்.  நாடு தழுவிய அளவில் ஒரே உரிமம்தான்.  தற்போது மாநில அரசிடம் உள்ள உரிமம் வழங்கும் உரிமை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப் படும்.தற்போது உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித்தகுதி உள்ளது.  இனி எவ்வித கல்வித்தகுதியும் தேவையில்லை.  உரிமம் பெற கல்வித்தகுதியே தேவையில்லை என்பதன் மூலம் விபத்தைக் குறைக்கப் போகிறதாம் மோடி அரசு.

தகுதிச்சான்றிதழ்

தனியார் வாகனங்கள் தவிர பொதுப்போக்குவரத்துக் கான அனைத்து வாகனங்களும் (பயணிகள் பேருந்து, லாரி, ஆட்டோ, டாக்சி, வேன்கள், சிறிய சரக்கு வாகனம் உட்பட) வருடம் ஒரு முறை ஆர்.டி.ஓ  அலுவலகத்திற்குச் சென்று தகுதிச்சான்றிதழ் பெற வேண்டும். இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் தகுதிச்சான்றிதழ் வழங்கும் பணி தனியார் நிறுவ னங்களிடம் ஒப்படைக்கப்படும்.

பொதுப்போக்குவரத்து வாகனம் மட்டுமின்றி சொந்த வாகனம் வைத்திருப்போரும் குறிப்பிட்ட காலத்தில் தகுதிச் சான்றிதழ் பெற சட்டத்தில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.  தகுதிச்சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பழுதான வாகனத்தை  எங்கே பழுது பார்ப்பது?

வாகனங்கள் பழுதானால் தற்போது சாலையோர ஒர்க் ஷாப்களில் பழுது பார்க்கிறோம். உதிரிபாக கடைக ளில் உதிரிபாகம் வாங்குகிறோம். ஆனால், வாகன உற்பத்தி செய்யும் நிறுவனம் தயார் செய்யும் உதிரிபாகத்தைத் தவிர வேறு உதிரிபாகம் மாட்டினால் வாகன உரிமையாளருக்கு சிறைத்தண்டனை வழங்க சட்டம் வழிவகை செய்கிறது.  அதாவது வாகனங்களை இனி உற்பத்தியாளரின் சர்வீஸ் ஸ்டேஷனில்தான் வேலை பார்க்க வேண்டும். சாலையோரம் ஒர்க் ஷாப் நடத்தும் பல லட்சக்கணக்கானோரின் வாழ்வாதா ரம் பறிக்கப்பட்டு, வீதியில் நிறுத்தப்படுவர்.

வாடகை வாகனங்கள் இயக்கும் உரிமை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே!
 

பெரு நகரங்களில் ஓலா, உபேர் போன்ற நிறுவ னங்கள் மூலம் இப்போது ஆட்டோ, டாக்சி போன்ற வாகனங்க ளை வாடகைக்கு பிடிக்கிறோம்.  ஓலா, உபேர் மூலம் அனுப்பப் படும் வாகனங்கள் எதுவும் அந்த நிறுவனங்களுக்கு சொந்த மானதல்ல.  அவர்களிடம் இருப்பது ஒரு செயலி மட்டுமே.  இதை வைத்தே இப்போது இந்த தொழிலை கபளீகரம் செய்து விட்டனர்.  சட்டத்திருத்தத்தின் மூலம் இந்த நிறுவனங்க ளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் வாடகை வாகனம் வைத்து பிழைக்கும் பல லட்சக்கணக்கா னோரின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, கார்ப்பரேட் நிறுவ னங்களின் கூலி அடிமைகளாக மாற்றப்படும் அவலம் உருவாகும்.

அரசு பஸ், தனியார் பஸ் என்னவாகும்?
பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் போக்கு வரத்து சேவை அளிக்கும்நோக்கத்தோடு போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. சில தனியார் பேருந்துகளும் தற்போது இயங்கி வருகின்றன.  இவற்றிற்கு பெர்மிட் வழங்கும் உரிமை, கட்டணம் நிர்ணயம் செய்யும் உரிமை மாநில அரசிடம் உள்ளது.  இனி மத்திய அரசே தனியார் பேருந்து இயக்க லைசென்ஸ் வழங்கும்.  அவர்களே கட்டணத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என சட்டம் திருத்தப்பட்டுள்ளன.  கார்ப்பரேட் முதலாளிகள் பயணிகள் போக்குவரத்தைக் கைப்பற்ற அனைத்து விதிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.  தற்போதைய தனியார் பேருந்து களோ, அரசுப்பேருந்துகளோ கார்ப்பரேட் நிறுவனங்க ளோடு போட்டிபோட்டு உயிர்வாழ முடியுமா?  குறைந்த கட்ட ணத்தில் போக்குவரத்து என்பது எட்டா கனி ஆகும்.

இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு கொள்ளை லாபம்

வாகன விபத்தால் பாதிக்கப்பட்ட நபரின் வயது, அவரது வருமானம், அவருக்கு ஏற்பட்ட பாதிப்பின் தன்மையை யொட்டி இழப்பீடு வழங்கும் அடிப்படையில் மோட்டார் வாகன சட்டத்தில் அட்டவணை இருந்தது.  இதை வைத்துத்தான் விபத்திற்கான நஷ்டஈட்டை கணக்கீட்டு வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு பெற்றுத்தருவார்கள். தற்போது இந்த அட்டவணை சட்டத்திலிருந்து அகற்றப் பட்டுவிட்டது.  எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் இன்சூரன்ஸ் நிறுவனம், மரணமடைந்தால் ரூ. 5 லட்சம் மட்டும் இழப்பீடாக வழங்கினால் போதும்.  ஊனமானால் அதிகபட்ச இழப்பீடு ரூ. 2 லட்சம் வழங்கினால் போதும் என சட்டம் திருத்தப் பட்டுள்ளது.  இதற்கு மேல் நீதிமன்றம் தொகை நிச்சயித்தால் அதை வாகன உரிமையாளர்தான் வழங்க வேண்டும்.  சட்டத்திருத்தத்தின் மூலம் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு மோடி அரசு அளித்துள்ள பரிசு இது.  இனி வழக்கறிஞர்க ளுக்கும் வேலை இல்லை.

சிறிய விதிமீறலுக்குக்கூட கடும் தண்டனை

மோட்டார் வாகன விதிகளைப் பின்பற்ற விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதே உலகம் முழுவதும் உள்ள நடைமுறை. ஆனால் சிறிய விதிமீறலுக்குக்கூட கடும் தண்டனை கொடுக்கிறது மோடி அரசு. ஒரு வாகனம் பழுதாகி நின்றால் சாலையிலிருக்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.500 தண்டத்தொகை கட்ட வேண்டும்.  ஹெல்மெட் அணியாவிட்டால் 1000 ரூபாய். கொள்ள ளவைவிட கூடுதல் பயணிகளை ஏற்றினால் ஒவ்வொரு கூடுதல் பயணிக்கும் ரூ.200, கூடுதல் சுமையை ஏற்றினால் ஒவ்வொரு டன்னுக்கும் ரூ.1000, தொடர்ந்து ஹாரன் அடித்தால் முதல் முறை 1000 ரூபாய், அடுத்த முறை 2000 ரூபாய், வண்டியை கூடுதல் சத்தத்தோடு இயக்கினால் 3 மாதம் ஜெயில், 5000 ரூபாய் அபராதம், இரண்டாவது முறை என்றால் ஒரு வருட ஜெயில் ரூ.10000 அபராதம்.  இதுபோல் எண்ணற்ற தண்டனைகள். சட்டம் நிச்சயித்துள்ள தண்டனை மூலம் யார் பயன்பெறப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியே. விபத்தைக் காரணம் காட்டி மோடி அரசு செய்துள்ள சட்டத் திருத்தம் தேன் தடவிய விஷம்.  மோட்டார் தொழிலை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றவும், பல லட்சம் பேரின் வாழ்வாதாரத்தைப் பறிக்கவும், ஏழை மக்களின் பயண உரிமையை மறுக்கவும் செய்யப்பட்டுள்ள அநியாயமான நடவடிக்கை.  மோட்டார் வாகன சட்டத்திருத்தத்திற்கு எதிராக அனைத்துப் பகுதி மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மோடி அரசு உயர்த்தவுள்ள புதிய கட்டண விகிதங்கள்

வாகன வகை             தற்போதைய        பரிந்துரை

                                           கட்டணம் ரூ         கட்டணம் ரூ    

இருசக்கர வாகனம்                 ரூ.50/-        ரூ.1,000/-

ஆட்டோ வாகனம்                    ரூ.600/-        ரூ.5,000/-
 

கார், ஜீப்

(சொந்த பயன்பாடு)             ரூ.600/-         ரூ.5,000/-
 

கார், ஜீப்

(வணிக பயன்பாடு)            ரூ.1,000/-        ரூ.10,000/-


பயணிகள்

சரக்கு வாகனம்                     ரூ.1,500/-        ரூ.20,000/-

வாகன புதுப்பித்தல் மற்றும் எப்.சி. கட்டணம்

         

வாகன வகை                தற்போதைய        பரிந்துரை

                                               கட்டணம் ரூ         கட்டணம் ரூ    

இருசக்கர வாகனம்                 ரூ.50/-        ரூ.2,000/-
 

ஆட்டோ வாகனம்                     ரூ.625/-        ரூ.10,000/-

 

கார், ஜீப்

(சொந்த பயன்பாடு)                 ரூ.600/-        ரூ.15,000/-

 

கார், ஜீப்

(வணிக பயன்பாடு)                  ரூ.1,000/-        ரூ.20,000/-

 

பயணிகள்

சரக்கு வாகனம்                           ரூ.1,500/-        ரூ.40,000/-

 

கட்டுரையாளர் : பொதுச்செயலாளர்,  தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு)