மொழி என்பது மக்களின் உயிர் மூச்சு. அதன்வழி இணைவதற்கும் வளர்வதற்கும் மக்கள் இயல்பாக விரும்புகின்றனர். இந்த விருப்பத்தின் பெருவெளிப்பாடுதான் இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் கோரிக்கைக்கு அடித்தளமிட்டது. இந்திய மக்களின் மொழி மீதான விருப்பினை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உணர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதன் விளைவுதான் வெள்ளையர் ஆட்சிக் காலத்திலேயே முதலாவது மொழிவழி மாநிலம் அமைவதற்கு வழிவகுத்தது. இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசு, நிர்வாக வசதிக்காக மொத்த நிலப்பரப்பை யும் பாம்பே, மெட்ராஸ், பெங்கால் (வங்கம்) என மூன்று மாகா ணங்களுக்குள் அடக்கிவிட்டது. ஆனால் மொழி உணர்வு மிக்க இந்திய மக்கள் அடங்க மறுத்தனர்.
1895 ஆம் ஆண்டு சம்பல்பூரில் மொழிப் போராட்டம் தொடங்கியது. முதலில் வங்க மாகாணத்திலும் பின்னர் பீகார், ஒரிசா இணைந்த ஆட்சிப் பகுதியிலும் வாழ்ந்த ஓரியா மொழி பேசும் மக்கள் தங்களுக்கென தனி மாநிலம் வேண்டும் என்று கோரினர். இதன் தொடர்ச்சியாக 1902 ஆம் ஆண்டு பாலசோர் (இப்போது ஏவுகணை சோதனை செய்வதற்கான இடம்) மன்னர் மொழிவழி மாநில கோரிக்கை எனும் முதலா வது கணையை மனுவாக விடுத்தார். கர்சன் பிரபுவுக்கு அந்த மனு அளிக்கப்பட்டது.
முதல் மொழி வழி மாநிலம்
இதே கோரிக்கைக்காக ஒரிசாவின் கவுரவம் என்று போற்றப்படுகின்ற மதுசூதன் தாஸ் (மதுபாபு) 1903 ஆம் ஆண்டு உத்கல் சம்மிலானி ( உத்கல் ஒன்றிய மாநாடு) என்ற அமைப்பைத் தொடங்கினார். (தேசிய கீதத்தில் உள்ள உத்கல் என்ற சொல் ஒரிசாவைக் குறிப்பதாகும்) இந்த அமைப்பின் முதலாவது கூட்டத்திற்கு மயூர்பஞ்ச் மன்னர் ராமச்சந்திர பஞ்ஜ தேவ் தலைமை தாங்கினார். அடுத்த மன்னரும் மொழிவழி மாநிலத்திற்கு ஆதரவானார். நீல காந்ததாஸ் அந்த மொழிவழி மாநிலப் போராளி. 1927ல் சைமன் கமிஷனிடம் மனு அளித்தார். 1930 இல் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் பீகார் - ஒரிசா சட்டப்பேரவை சார்பில் பங்கேற்ற பார்லகேமுண்டி மகாராஜா கிருஷ்ண சந்திர கஜபதி மொழிவழி மாநில கோரிக்கையை வலியுறுத்தினார். இப்படி மன்னர்களும் மக்களும் ஒருங்கிணைந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக 1931ல் ஓடோனல் எல்லை வரையறை ஆணையத்தை பிரிட்டிஷ் அரசு அமைத்தது. ஒரிசாவுக்கான வரைபடம் தயாரிக்கும் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. இப்படித்தான் 1935 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே இந்திய நிர்வாகச் சட்டத்தின் கீழ் ஒரிசா மாநிலம் உருவாக்கப்பட்டது. 1936 ஏப்ரல் 1 அன்று அதிகாரப்பூர்வமாக ஒரியா மொழி பேசும் மக்களுக்கு தனி மாநிலம் பிறந்தது. இந்திய வர லாற்றில் மொழிவழி மாநிலமாக முதலில் உதயமானது ஒரிசா (தற்போதைய ஒடிசா) என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
மொழிவழி மாநிலம் என்பதற்கு முன்மாதிரியாக இருந்தது காங்கிரஸ் இயக்கம். 1920 ஆம் ஆண்டு நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டில், நாடு விடுதலை அடைந்த பின் மொழிவழி மாநிலம் என்பதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டிலேயே மாநிலக் கமிட்டிகளை மொழிவாரியாகவே அமைத்தது. முதலாவது அரசியல் சாசன மாதிரியைத் தயாரிப்பதற்கு மோதிலால் நேரு (ஜவஹர்லால் நேருவின் தந்தை) தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் மொழிவழி மாநிலத்திற்கு ஆதரவு தெரிவித்தது. இதற்கெல்லாம் முன்பாக பாலகங்காதர திலகர் 1891 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதியிட்ட தமது கேசரி இதழில் மொழிவழி மாநிலத்திற்கு ஆதரவு தெரிவித்தி ருந்தார். இவ்வகைப்பட்ட மாநிலங்கள் அமைவதால் மக்களும் முன்னேறுவார்கள்; மொழியும் வளரும் என்பது அவர் கருத்து. இதுதான் பின்னாளில் காந்தியின் கருத்தா கவும் இருந்தது. இவ்வளவு இருந்தும் நாடு விடுதலை அடைந்ததும் காங்கிரஸ் தடுமாறத் தொடங்கிவிட்டது. அரசமைப்பு நிர்ணய சபையில் மொழிவழி மாநிலத்திற்கு ஆதரவு தெரிவித்த நாட்டின் முதலாவது பிரதமரான நேரு, ஆனால் ..... என்று இழுக்கத் தொடங்கினார்.
இதனால் அரசமைப்பு நிர்ணய சபை அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.தார் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டியதாயிற்று. இந்த ஆணையத்தின் அறிக்கை தலைகீழ் விகிதத்தில் அமைந்துவிட்டது. இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைப்பது தேவையற்றது. நிர்வாக வசதிக்கேற்ப மாநி லங்கள் உருவாக்கப்படுவதுதான் புவியியல், இயற்கை வளங்கள் சார்ந்த பொருளாதார மேம்பாட்டுக்கு வழி வகுக்கும். நாட்டின் ஒற்றுமையும் பாதுகாக்கப்படும் என்று மீண்டும் பூஜ்யத்துக்குத் தள்ளிவிட்டது.
தார் ஆணைய அறிக்கை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அதன் பழைய நிலையில் இருந்து வேறுபட்டுப் போவதை பலரும் விமர்சித்தார்கள். அதனால் தாரின் அறிக்கையை மறுபரிசீலனை செய்ய ஜேவிபி கமிட்டி அமைக்கப்பட்டது. (ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், பட்டாபி சீதாரா மையா என்ற பெயர்களின் சுருக்கம்தான் ஜேவிபி) இந்தக் கமிட்டியும் மொழிவழி மாநில உருவாக்கத்திற்கு ஒப்புதல் தெரி விக்கவில்லை. மொழிவழி பிரிந்து நிற்பது தேச ஒற்று மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தானது என்ற பாடத்தை வரலாறு நமக்குக் கற்றுத் தந்துள்ளது என்பது சர்தார் பட்டேலின் கருத்து. கம்யூனிஸ்டுகள் மீதான காழ்ப்பையும் அவர் வெளிப்படுத்தினார். கம்யூனிஸ்டுகள் தங்களின் அரசி யல் நோக்கத்திற்காக தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கும் ஐதராபாத்தை ஆந்திராவுடன் சேர்க்க வேண்டும் என்று கூறு கிறார்கள் என்ற கருத்தைப் பதிவு செய்தார். இதுபோன்ற விஷ யங்களில் நேருவும், பட்டேலும் கைகோர்த்தே நடந்தனர். இதன் பிறகு முற்றிலும் நம்பிக்கை இழந்த நிலையில் பொட்டி ஸ்ரீராமுலு 1952ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி மொழிவழி ஆந்திர மாநிலம் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
நான்கு பிரிவுகளாக...
1950 ஆம் ஆண்டு ஏற்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் மொழிவழி மாநிலம் என்பதற்கான அறிகுறி கூட இல்லாமல் நாடு நான்கு பிரிவுகளாக பகுக்கப்பட்டதும் இதற்கொரு காரணம். பகுதி ‘ஏ’ மாநிலங்கள் - ஆளுநர்களைக் கொண்ட வையாக அசாம், பீகார், பாம்பே, மத்தியப்பிரதேசம், மெட்ராஸ், ஒரிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் என ஒன்பது மாநிலங்கள்.
பகுதி ‘பி’ மாநிலங்கள் - மன்னர் சமஸ்தானங்கள் ராஜப் பிரமுகர்களைக் கொண்டவையாக ஐதராபாத், ஜம்மு-காஷ்மீர், மத்திய பாரத், மைசூர், பெப்சு (பாட்டியாலா கிழக்கு பஞ்சாப் சிந்து ஒன்றியம்), ராஜஸ்தான், சௌராஷ்டிரா, திரு வாங்கூர் - கொச்சி என 8 மாநிலங்கள்.
பகுதி ‘சி’ மாநிலங்கள் - முன்னாள் முதன்மை ஆணை யர்களைக் கொண்டவையாக ஆஜ்மீர், போபால், பிலாஸ்பூர், தில்லி, இமாச்சலப் பிரதேசம், கட்ச், திரிபுரா, மணிப்பூர், விந்தியப் பிரதேசம் என பத்து மாநிலங்கள்.
பகுதி ‘டி’ யூனியன் பிரதேசமாக அந்தமான் நிக்கோ பார் தீவுகள்.
நாடு விடுதலை பெற்ற பின் சுமார் 10 ஆண்டு காலம் 1956 வரை இப்படித்தான் மாநிலங்கள் அமைக்கப்பட்டிருந் தன. இது ஒரு வித்தியாசமான சூழலும் அணுகுமுறையும்.
முதல் உயிர்த்தியாகம்
இந்தச் சூழலில்தான் தெலுங்கு பேசும் மக்களுக்குத் தனி மாநிலம் கோரி பொட்டி ஸ்ரீராமுலு சாகும்வரை உண்ணா விரதத்தைத் தொடங்கினார். (இப்போது சாவது குற்ற மாக்கப்பட்டு விட்டதால் காலவரையற்ற உண்ணாவிரதம் எனப்படுகிறது) மேற்கொண்ட கொள்கையில் வைராக்கிய குணம் கொண்ட அவரின் உண்ணாவிரதம் 58 ஆவது நாளை எட்டியபோது 1952 டிசம்பர் 15ஆம் தேதி உயிர் நீத்தார். மொழிவழி மாநிலத்திற்காக உயிர்த் தியாகம் செய்த முதல் போராளி பொட்டி ஸ்ரீராமுலு. இவரது இறப்புக்குப் பின் சென்னையில் ஆயிரக்க ணக்கானோர் திரண்ட இறுதி ஊர்வலம் நடந்தது. விசாகப் பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் அளவுக்கு மக்கள் கொதிப்படைந்தனர். அதி னப்பள்ளி, விஜயவாடா பகுதிகளில் வெடித்த இந்தப் போராட் டத்தை அடக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி னர். இதில் 7 பேர் பலியானார்கள். ஆந்திராவிலும் சென்னை யிலும் பதற்றநிலை தொடர்ந்தது. மொழிவழி மாநிலம் என்ற கோரிக்கை எவ்வளவு வலுவானது என்பதை சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமர் நேரு உணரத் தலைப் பட்டார். இது நாடு முழுவதும் தீயாகப் பரவி விடக்கூடாது என்ற அச்சம் அவரைப் பற்றிக் கொண்டது.
பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்த 14 நாட்களுக்குப் பின் 1952 டிசம்பர் 29 ஆம் தேதி ஆந்திர மாநிலம் உருவாக்கப் படும் என்ற உறுதிமொழியை அளித்தார். அதன் பிறகுதான் அமைதி திரும்பியது. பொட்டி ஸ்ரீராமுலு உயிர்த்தியாகம் செய்த 10 மாதங்களுக்குப் பின் 1953 அக்டோபர் ஒன்றாம் தேதி ஆந்திர மாநிலம் பிறந்தது. இது ஆந்திரப் பிரதேசம் (விசாலாந்திரா) அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்ட பகுதி ‘பி’ மாநிலங்களில் ஒன்றான ஹைதராபாத், அதனை அடுத்த தெலுங்கானா ஆகிய பகுதிகள் ஆந்திர மாநிலத்தில் இல்லை. மீண்டும் விசாலாந்திரா போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் சில காங்கிரஸ் தலைவர்களோடு கம்யூனிஸ்டுகளும் முழுமையாக ஈடுபட்டனர். இந்த நிலையில்தான் 1953 டிசம்பர் 22 இல் மீண்டும் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஃபசல் அலி தலைமையிலான இந்த ஆணையத்தில் மேலும் இரண்டு உறுப்பினர்களும் இருந்தனர். இந்த ஆணையத்தின் பணியை அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த கோவிந்த் வல்லப பந்த் மேற்பார்வையிட்டு வந்தார். ஃபசல் அலி ஆணையம் 1955 செப்டம்பர் 30 அன்று அறிக்கை அளித்தது. இந்த ஆணையமும் மொழிவழி மாநிலத்திற்குப் பரிந்துரை செய்ய வில்லை. மாறாக, அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ள மூன்று வகை மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசம் என்பதை மாற்றி 16 மாநிலங்கள் 3 மத்திய நிர்வாக பகுதிக ளாகப் பிரிக்கலாம் என பரிந்துரைத்தது.
மாநிலங்கள் மறு உருவாக்கச் சட்டம்
இந்த ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெற்றுக் கொண்ட அரசு அதில் சிறு மாற்றம் செய்து 14 மாநிலங்கள் 6 யூனியன் பிரதேசங்கள் என்று அறிவிப்பு செய்தது. அரச மைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஆளுநர் மாநிலங்கள், ராஜப் பிரமுகர் மாநிலங்கள், முதன்மை ஆணையர் மாநி லங்கள் என்பதெல்லாம் நீக்கப்பட்டு ‘மாநிலங்கள்’ என பொதுப் பெயர் சூட்டுவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கா கத்தான் மாநிலங்கள் மறு உருவாக்கச் சட்டம் 1956 ஆகஸ்ட் 31 அன்று இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் அம லாக்கம் 1956 நவம்பர் 1 என நிர்ணயிக்கப்பட்டது. இதனால் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட தினம் நவம்பர் 1 என பொதுவாகக் கூறப்படுகிறது. 14 மாநி லங்கள், 6 யூனியன் பிரதேசங்கள் என்று வரையறுக்கப் பட்ட போது பழைய ஏ, பி, சி மாநிலங்களைக் கலைத்துப் போட்டு சேர்க்கும்போது ஓரளவுக்கு ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்கள் திரண்டிருந்த பகுதி மாநில அந்தஸ்து பெற்றது என்பதுதான் உண்மை.
மெட்ராஸ் ராஜ்யம் என்ற பெயரால்தான் சங்கரலிங்கனார் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். மெட்ராஸ் ராஜ்யத் திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்பது உட்பட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை அவர் தொடங்கினார். அவரது உயிர்த் தியாகத்திற்குப் பிறகு நவம்பர் ஒன்றாம் தேதிதான் மாநிலம் பிரிக்கப்பட்டது என்றாலும் தமிழ்நாடு என அதற்குப் பெயர் சூட்டப்படவில்லை என்பதை மறந்து விடக் கூடாது.
மேலும், தமிழ் மொழி பேசும் அனைவரையும் மெட்ராஸ் ராஜ்ஜியத்தில் இணைக்கவில்லை என்பதையும் உணர வேண்டும். அதனால்தான் எல்லை மீட்புப் போராட்டங்கள் நடைபெற்றன. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் என்பதால் திருப்பதியைத் தமிழ் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்கிற போராட்டம் நடத்தப்பட்டது. மேற்குப் பகுதியில் திருவாங்கூர் - கொச்சி தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை யும் எழுந்தது. கன்னியாகுமரி தமிழ்நாட்டில்தான் இருக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்தது. இத்தகைய போராட்டங்கள் எழுச்சியோடு நடந்து பத்துக்கும் அதிகமா னோர் உயிரிழந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது. எனவே, 1956 நவம்பர் 1 இல் உருவான மெட்ராஸ் ராஜ்யம் என்பது மொழி வழியாக உருவாக்கப்பட்டது அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
ஆந்திர மாநிலம் பிறந்த பின் எழுந்த விசாலாந்திரா கோரிக்கை வலுப்பெற்று 1956ல் ஹைதராபாத் தெலுங்கா னா பகுதிகள் ஆதரவோடு ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப் பட்டது. அப்படித்தான் ஆந்திரப் பிரதேசம் உருவானது. அது இருக்கட்டும். 14 மாநிலங்கள் 6 யூனியன் பிரதேசங்கள் என அரசு பொதுவாக அறிவித்ததால் மீண்டும் மொழிவழி மாநில கோரிக்கை ஆங்காங்கே எழுந்தது. மராத்தி மொழி பேசும் மக்களுக்குத் தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற போராட்டம் 1954 - 55ல் தொடங்கியது. சம்யுக்த மகாராஷ்டிரா என்ற இயக்கத்தின் மூலம் நடத்தப்பட்ட போராட்டங்களிலும் அவற்றை அடக்கக் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடுகளிலும் 105 பேர் பலியானார்கள். இப்படித்தான் மராத்தி மொழிக்கான மகாராஷ்டிராவும் குஜராத்தி மொழிக்கான குஜ ராத்தும் உருவாயின. அதுவும் 1956 நவம்பர் 1ல் அல்ல; 1960 மே ஒன்றாம் தேதி.\
பஞ்சாப் மாநிலம்
மொழிவழி மாநிலங்கள் உருவான பின் ஒன்று சேர்ந்தி ருந்த பஞ்சாப் - ஹரியானா மாநிலத்தில் பஞ்சாபி மொழி பேசும் மக்களுக்குத் தனி மாநிலம் என்ற குரல் ஓங்கியது. இந்தக் குரல் 1950களில் பஞ்சாபி சுபா என்ற பெயரில் இயக்க மாகத் தொடங்கி வலுத்தது. என்றாலும் சாந்த் ஃபதேஹ் சிங், பொட்டி ஸ்ரீராமுலு வழியில் 1960 டிசம்பர் 18-ல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். 20 நாட்க ளுக்கு பின் நேருவும் பிற தலைவர்களும் அளித்த வாக்குறு தியை ஏற்று 1960 ஜனவரி 9ல் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். பஞ்சாப் மொழிவழி மாநில கோரிக்கைக்காக மாஸ்டர் தாரா சிங் 1961ல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு 48 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார். இவரும் பிரதமர் நேருவின் உறுதிமொழியை ஏற்று உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார். பஞ்சாப் மொழிவழி மாநில கோரிக்கையில் நேருவுக்கு வழக்கம்போல் ஒரு நெருடல் ஏற்பட்டது. பஞ்சாபி மொழி பேசுவோரில் பெரும்பான்மையினர் சீக்கியர்கள். இவர்கள் ஒரு சமயம் சார்ந்தவர்கள். இதனை மொழிவழி மாநிலம் என்பதா? சமய வழி மாநிலம் என்பதா? இந்த ஐயம் காரண மாக கோரிக்கை மீதான பரிசீலனையை ஒத்திப் போட்டார்.
ஆனால், காலத்தின் ஓட்டம் வேறு மாதிரி ஆகிவிட்டது. 1964ல் நேரு மறைந்தார். லால் பகதூர் சாஸ்திரி பிரதமரா னார். புதிய சூழலில் 1965ல் சாகும் வரை உண்ணாவிரதம் என்று ஃபதேஹ் சிங் மீண்டும் அறிவித்தார். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் போர் மூண்டதால் போராட்டத்தை ஒத்தி வைத்தார்.சாஸ்திரி மறைவுக்குப்பின் பிரதமரான இந்திரா காந்தி, மகாவீர் தியாகி, யஷ்வந்த் சவான் ஆகியோருடன் இணைந்து பஞ்சாப் கோரிக்கையைப் பரிசீலித்தார். பின்னர் மக்களவைத் தலைவர் ஹுக்கம் சிங் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை ஏற்று பஞ்சாப் மாநிலம் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான மசோதா 1966 செப்டம்பர் 30 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வழக்கம்போல் அதே ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி பஞ்சாப் மாநிலம் பிறந்தது. புதிதாக உருவாக்கப்படும் மாநிலத்தின் செயலாக்கம் நவம்பர் 1ல் என்ற நடைமுறை 1956க்குப் பின் 1966ல் மீண்டும் தொடங்கியது. இதில் நகைமுரண் என்னவென்றால் மொழி வழி மாநில உருவாக்கம் என்றில்லாமல் நிர்வாக வசதி என்ற பழைய நிலைப்பாட்டின்படி பிரிக்கப்பட்ட மூன்று மாநிலங்க ளும் நவம்பர் மாதத்தில்தான் செயல்பாட்டுக்கு வந்தன. தேதிகள் தான் மாற்றம். 2000 ஆவது ஆண்டில் சத்தீஸ்கர் நவம் பர்-1, உத்தர்கண்ட் நவம்பர்-9, ஜார்க்கண்ட் நவம்பர்-15.
ஆந்திர மாநிலம் பிறந்த பின் எழுந்த விசாலாந்திரா கோரிக்கை வலுப்பெற்று 1956ல் ஹைதராபாத் தெலுங்கா னா பகுதிகள் ஆதரவோடு ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப் பட்டது. அப்படித்தான் ஆந்திரப் பிரதேசம் உருவானது. ஆனால் அந்த ஒட்டு 58 ஆண்டுகள் நீடித்ததுபோல் தெரிந்து விலகிவிட்டது. 2014, நவம்பர் 1ல் தெலுங்கானா தனி மாநிலம் உருவானது வரலாற்றின் நகைமுரணாகும். மைசூர் மாநிலம் 1973இல் தான் கர்நாடகா எனப் பெயர் மாற்றம் கொண்டது என்பதும் மெட்ராஸ், மதராஸ், சென்னை என்றெல்லாம் அழைக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என 1969 ஜனவரி 14-ல்தான் மாற்றம் பெற்றது என்பதும் நினைக்கத்தக்கவை.