tamilnadu

img

பெட்ரோல், டீசலை தொடர்ந்து விவசாயத்துக்கான உரங்களின் விலை 60 சதவீதம் உயர்வு... டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்டனம்...

தஞ்சாவூர்:
பெட்ரோல், டீசல் பொருட்களை தொடர்ந்து உரங்களின் விலையை திடீரென 60 சதவீதம் உயர்த்தியமைக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக டிஏபி 50 கிலோ கொண்ட ஒரு மூட்டையை ரூ.1200 லிருந்து ரூ.1900 ஆக உயர்த்தியுள்ளது. அதே போல் காம்ப்ளக்ஸ் 15:15 உரம் ரூ.1150 லிருந்து ரூ.1650 ஆகவும், காம்ப்ளக்ஸ் 20:20 உரம் ரூ.1000-த்திலிருந்து ரூ.1350ம் திடீரென உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் கூறுகையில், 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில், 6 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு விவசாயிகளின் வருவாயும் இரட்டிப்பாக்கப்படும் என சூளுரைத்தார். ஆனால் தற்போது நான்கு மாநிலங்களில் தேர்தல் முடிந்ததும் இந்திய விவசாயிகளை வஞ்சித்துவிட்டு, திடீரென உரங்களின் விலையை மத்திய அரசின் ஆதரவோடு உயர்த்தியுள்ளனர். இந்த விலை உயர்வை நியாயப்படுத்த வேண்டுமானால் மத்திய அரசு உடனடியாக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை உயர்த்தி வழங்க வேண்டும். இல்லையென்றால் உரங்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் கூறுகையில், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த 7 ஆண்டுகளில் நெல் கிலோவுக்கு 55 பைசா மட்டுமே உயர்த்தியுள்ளார். அதே நேரத்தில் டிஏபி உரம் கிலோவுக்கு ரூ.15 உயர்த்த அனுமதி வழங்கியுள்ளார். தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உரங்களின் விலை உயர்வால் விவசாயிகள் விவசாயத்தை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். உற்பத்தி செலவு அதிகரிக்கும் போது, அதற்கு ஏற்றார்போல் கொள்முதல் விலையையும் உயர்த்தி வழங்க வேண்டும். உரங்களின் 60 சதவீத விலை உயர்வால் சிறு, குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே உயர்த்தப்பட்ட விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.
 

;