புரோ கபடி லீக்
குறுகிய காலத்தில் பிரபலமடைந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள புரோ கபடி லீக் தொடரின் 7-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் புதனன்று நடைபெறுகிறது. மொத்தம் 12 அணிகள் பங்குபெற்ற இந்த தொடரில் பெங்கால், தில்லி, ஹரியானா, உ.பி. மும்பை, பெங்களூரு ஆகிய 6 அணிகள் எலிமினேட்டர் சுற்றுக்குத் தகுதி பெற்றது. எலிமினேட்டர் சுற்று முடிவில் பெங்களூரு, தில்லி, பெங்கால், மும்பை ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தில்லி - பெங்களூரு அணிகளும், 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பெங்கால் - மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த இரண்டு ஆட்டங்களும் புதனன்று குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரான அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
யாருக்கு வெற்றி?
முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியும், தில்லி அணிகளும் மோதுகின்றன. ரைடர் ராஜாக்களான பவனும் (பெங்களூரு), நவீனும் (தில்லி) எதிரெதிர் அணியில் இருப்பதால் யாருக்கு வெற்றி என்பதைத் திடமாகக் கணிக்க முடியாது. 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பெங்கால் - மும்பை அணிகள் சரிசம பலத்திலிருந்தாலும், நடப்பு சீசனில் பெங்கால் அணியின் கை சற்று ஓங்கி நிற்கிறது. மும்பை அணி தடுப்பாட்டத்தில் மட்டுமே சிறப்பாகச் செயல்படும். ஆனால் பெங்கால் அணி ஆல்ரவுண்டராக கலக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் பெங்கால் அணி வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தில்லி - பெங்களூரு
நேரம் : இரவு 7:30
பெங்கால் - மும்பை
நேரம் : இரவு 8:30
இடம் : அகமதாபாத்