tamilnadu

img

செய்தியாளரை அச்சுறுத்திய ஜக்கி வாசுதேவ் மன்னிப்பு கேட்க வேண்டும்- மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்தல்

பிபிசி தமிழ் ஊடகத்திற்கு நேர்காணல் அளித்த ஜக்கி வாசுதேவ், நெறியாளரின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் பேட்டியை பாதியில் நிறுத்தியுள்ளார். மேலும் அவருடன் வந்தவர்கள் வலுக்கட்டாயமாக கேமராக்களில் ஒளிப்பதிவை வலுக்கட்டாயமாக நிறுத்தியுள்ளனர். இந்தச் செயலுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பத்திரிகையாளரை மிரட்டி, பணிசெய்ய விடாமல் தடுத்து அராஜகத்தில் ஈடுபட்ட ஜக்கி வாசுதேவ் மற்றும் உதவியாளர்களை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

ஈஷா ஃபவுண்டேஷன் அமைப்பின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பிபிசி தமிழ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியின்போது, கோவையில் உள்ள ஈஷா மையத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டது குறித்தும், அதன் பிறகே அனுமதி பெறப்பட்டது குறித்தும் ஜக்கி வாசுதேவிடம் பிபிசி செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளிக்க முடியாமல் திணறிய ஜக்கி வாசுதேவ், கேள்வி எழுப்பிய செய்தியாளரை நோக்கி கையை நீட்டி அச்சுறுத்தும் வகையில் ஒருமையில் பேசியதுடன், அவரை பொது அறிவற்றவர் என்றும் கூறியுள்ளார்.

ஜக்கி வாசுதேவின் அந்த நேர்காணலை வியாழன்று (09.06.22) டிஜிட்டல் தளத்தில் பதிவேற்றியுள்ள பிபிசி தமிழ் செய்தி நிறுவனம், நேர்காணலின் இடையிலேயே ஜக்கி வாசுதேவின் ஆட்கள் கேமராக்களை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.

அமைதியையும், அன்பையும் போதிப்பதாக கூறிக்கொள்ளும் ஜக்கி வாசுதேவ், செய்தியாளர் எழுப்பிய ஒரு நியாயமான கேள்வியை எதிர்கொள்ள முடியாமல், அவரிடம் கோபப்பட்டு, அவரை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அத்துடன், ஜக்கி வாசுதேவின் உதவியாளர்கள் செய்தியாளர்களை பணிசெய்யவிடாமல் தடுக்கும் வகையில், கேமராக்களை நிறுத்தியது அராஜகத்தின் உச்சம்.

ஆகவே, செய்தியாளரை அச்சுறுத்தும் வகையிலும், அவமதிக்கும் வகையிலும் நடந்துகொண்ட ஜக்கி வாசுதேவின் நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

ஜக்கி வாசுதேவ் மற்றும் அவருடைய உதவியாளர்கள் பத்திரிகையாளர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.