tamilnadu

img

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது வரை பாலஸ்தீனத்தில் 53 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். காசாவில் குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் உணவுக்காகவும், மருத்துவ வசதிக்காகவும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.ஐ.நா நிவாரண உதவிகளையும் காசாவிற்குள் அனுமதிக்காமல் இருந்த இஸ்ரேல் ராணுவம் தற்போது தான் குறைந்த எண்ணிக்கையில் நிவாரண பொருட்கள் எடுத்து வந்த வாகனத்தை அனுமதிக்கிறது. இருப்பினும் பல குழந்தைகள் நோய்வாய்பட்டு உயிரிழக்கின்றனர்.

காசா மீது தொடர்ச்சியாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், போர் வேண்டாம் அமைதி வேண்டும் என்கிற முழக்கத்தோடு தமிழ்நாடும் முழுவதும் ஜூன் 1 அன்று கையெழுத்து இயக்கத்தை நடத்திட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறைகூவல் விடுத்திருந்தது.

இதனையடுத்து, தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பொதுமக்கள் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

கோவையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். கார்த்தி, மாவட்டச் செயலாளர் அர்ஜுன், மாவட்டப் பொருளாளர் தினேஷ்ராஜா மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.