tamilnadu

img

போராடும் உழவர்களோடு பொங்கல் திருநாளை கொண்டாடுவோம்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து....

சென்னை:
போராடும் உழவர்களோடு பொங்கல் தினம் கொண்டாடுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.  

கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:

தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.உலகம் முழுவதும் அறுவடையின் துவக்கத்தை கொண்டாடும் விழாக்கள் உள்ளன. எனினும், பொங்கல் திருநாள் என்பது இயற்கைக்கு நன்றி பாராட்டும் விழாவாகவும், பண்பாட்டு விழாவாகவும் பன்னெடுங்காலமாக தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.அண்மைக் கால வரலாற்றில் மனித குலம் சந்தித்திராத பேரிடராக கொரோனா எனும் கொடும் தொற்றுநோய் உலகத்தை தாக்கிய பின்னணியில், இயற்கையோடு இயைந்தே மனித இனம் வாழ வேண்டும் என்பதைஇந்த பேரிடர் பெரும் குரலெடுத்துகூறியிருக்கிறது. முதலாளித்துவத்தின் லாபவெறி இயற்கை வளங்களை சுரண்டுவது உலகின் இருப்புக்கே பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ஆயினும், அறிவியலின் துணை கொண்டு எத்தகைய சூழலையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும்,உழவுத் தொழிலையும் பாதுகாக்க இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் இந்நாளில் உறுதியேற்போம்.

‘சுழன்றும்  ஏர்பின்னது உலகம்’ என்பது வள்ளுவர் வாக்கு. உழவு என்பது தொழில் மட்டுமல்ல, மக்களின் பண்பாட்டு வேரும் ஆகும். ஆனால், மத்தியில் ஆளும் மோடிஅரசு கோடிக்கணக்கான விவசாயிகளிடமிருந்து விவசாயத்தைபறித்து கார்ப்பரேட்டுகளுக்கு கைமாற்றும் வகையில் மூன்று வேளாண் சட்டத் திருத்தங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், விதைஉரிமை, நிலவுரிமை, விளைபொருளுக்கு நியாயமான விலை கேட்கும்உரிமை உட்பட அனைத்து உரிமைகளையும் விவசாயிகள் இழக்க நேரிடும். செயற்கையான பற்றாக்குறையும் பஞ்சங்களும் உருவாக்கப்பட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பே கேள்விக் குறியாகிவிடும். எனவேதான், தலைநகர் தில்லியிலும் நாடு முழுவதும் விவசாயிகள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆட்சியாளர்களின் ஆணவச் சட்டங்களை கிழித்து எறியும்வரை ஓயப்போவதில்லை என சூளுரைத்து உழவர்கள் நடத்தும் போராட்டம் நாட்டின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை தருகிறது. விவசாயிகளின் கோபக் கனலின் குறியீடாகவே இந்த ஆண்டு பொங்கல் விழா அமைந்துள்ளது. இத்தகைய போராட்டங்களின் மூலமே விவசாயத்தை மட்டுமல்ல, இந்த தேசத்தையும் பாதுகாக்க முடியும். போராடும் உழவர்களோடு இணைந்து இந்த பொங்கலை கொண்டாடுவோம். போகி நெருப்பில் பழைய குப்பைகள் மட்டுமல்ல, நாட்டை நாசமாக்க துடிக்கும் வேளாண் திருத்தச் சட்டங்களும் எரிந்து சாம்பலாகட்டும்.

பொங்கல் திருநாளின்போது, வாசலில் போடப்படும் வண்ணக்கோலம் போல பன்முகத்தன்மைதான் இந்தியாவின் பெருஞ்சிறப்பு. ஆனால், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என வெறித்தனமான ஒற்றைத் தன்மையை திணிக்க மத்திய பாஜக கூட்டணி அரசு துடிக்கிறது. பெரும்பகுதி மக்களின் எழுத்தறிவையும் கல்வியறிவையும் மறுத்து மீண்டும் குலக்கல்விமுறையை கொண்டு வரும் நோக்கத்துடன் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது.தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளின் சமமானவளர்ச்சிக்கு உதவுவதற்கு பதிலாக இந்தி, சமஸ்கிருத மொழிகள் வம்படியாக திணிக்கப்படுகின்றன. இந்தியாவின் ஒற்றுமையையும்ஒருமைப்பாட்டையும் மதச்சார்பின்மை போன்ற உன்னத விழுமியங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

தமிழகம் இந்தாண்டு தேர்தலைசந்திக்க உள்ளது. மாநிலத்தைஆளும் அதிமுக அரசு, மத்திய அரசின்அனைத்து திட்டங்களையும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி மக்கள்வாழ்வை சீரழிப்பதோடு மாநிலஉரிமைகளை பறிக்க துணை நிற்கிறது. இந்த ஆட்சி அகற்றப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.பிறந்திருக்கும் தை தமிழகத்திற்கும் ஒரு நல்ல வழியை திறக்கும்என்ற நம்பிக்கையோடு அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம். 

;