மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அளவிலான சிறப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது. ‘‘நாடாளுமன்ற தேர்தலும், அரசியல் சித்தாந்த சவால்களும், கடமைகளும்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், ‘அரசியல் சித்தாந்த களத்தில் பாஜகவை முறியடிப்போம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அவரது உரையின் பகுதிகள் வருமாறு;
18-ஆவது மக்களவை தேர்தலை சந்திக்கக் கூடிய சூழல் இது. ஏப்ரல் துவக்கத்தில் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலை பத்தோடு பதினொன்றாக நாம் பார்க்கக் கூடாது. ஒரு சாதாரண காலத்தில் நடைபெறுகிற தேர்தலாக இதைப் பார்க்கக் கூடாது. அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? எந்த அரசு ஆட்சிக்கு வரும் என்று வழக்கமாக பேசுவதற்கான விசயமாக இந்த தேர்தலைப் பார்க்க முடியாது.
அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இது
இன்றைக்கு நமது நாடு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக உள்ளது. தேர்தலுக்கு பிறகு அது நீடிக்குமா; நமது நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் எதிர்காலம் என்ன என்கிற கேள்விகளை தீர்மானிக்கக்கூடிய தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும். அதேபோல இந்தியாவினுடைய அரசியல் சாசனம், அதன் எதிர்காலம் என்ன? அது இப்படியே நீடிக்குமா? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில்களை சொல்லக்கூடிய ஒன்றாக 18-ஆவது மக்களவைத் தேர்தலைப் பார்க்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமையின் கீழ் பாஜக இந்தியாவில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த 10 ஆண்டுகளில் எண்ணற்ற பிரச்சனைகளை, துயரங்களை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
நம் முன் உள்ள சவால்
பாஜக அரசாங்கம் ஒரு விசயத்தை மிகத் தெளிவாக தங்களது 10 ஆண்டுகால ஆட்சியின் மூலமாக உணர்த்தியிருக்கிறது. அது என்ன? இந்திய குடியரசினுடைய தன்மையை மாற்றுவோம் என்ற பகிரங்க அறிவிப்பு தான் அது. ஒரு இந்து ராஷ்டிரத்தை கட்டமைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம் என்பதையும் தெளிவாக பகிரங்கமாக சொல்லியிருக்கின்றனர். இந்து ராஷ்டிரம் என்பது என்ன? இன்றைக்கு நாம் எல்லோரும் விரும்புகிற மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசுக்கு நேர் எதிரான விசயம் தான் இந்து ராஷ்டிரம். அதை கொண்டு வருவதற்காகத்தான் இந்த தேர்தலை அவர்கள் சந்திக்க இருக்கிறார்கள்.
எனவே இது தான் நம் முன்னால் இருக்கிற சவால். இந்த தேர்தலில் நாம் விழிப்புடனும், தீவிரமாகவும் பணியாற்றி, பாஜகவை தோற்கடிக்க வேண்டும். பாஜக-ஆர்எஸ்எஸ் அரசாங்கம் வரவிடாமல் தடுத்து அவர்கள் நினைக்கிற இந்து ராஷ்டிரத்தை கட்டமைக்க விடாமல் தடுப்பது தான் நம் முன் உள்ள முதன்மைச் சவால்.
மிதிபடும் கூட்டாட்சி
பத்தாண்டு கால மோடி ஆட்சியில், கூட்டாட்சிக் கோட்பாடு மிதிக்கப்படுகிறது. மாநில உரிமைகள் நசுக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தத்தில் ஒன்றிய பாஜக அரசு, சகல விதமான அதிகாரங்களையும் பெற்ற ஒரு சக்திமிக்க வலிமையான அரசாங்கமாக மாறுவதையும், மாநில அரசுகளின் அனைத்து உரிமைகளையும் மறுத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியிலும் முட்டுக்கட்டை போட்டு அவர்களை ‘நிதிப் பட்டினி’யில் தள்ளுகிற நிலையை வெவ்வேறு வடிவங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தகர்க்கப்படும் அரசியல் சாசனம்
இந்திய அரசியல் சாசனத்தினுடைய அடிப்படையான தூண்கள் ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி ஆகியவை. இந்த 3 தூண்களுமே பல்வேறு வடிவங்களில் தகர்க்கப்பட்டு வருகின்றன. தாக்கப்பட்டு வருகின்றன.
ஒடுக்கப்படும் எதிர்க்கட்சிகள்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக கூறுவதற்கு, ஒன்றிய அரசை விமர்சிப்பதற்கு, பிரதமரை விமர்சிப்பதற்கு, மாற்றுக் கருத்துக்களை சொல்வதற்கு உரிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் எங்களுக்கு இந்த உரிமை இருக்கிறது என்பதை வலியுறுத்தினால் உடனடியாக அவர்கள் இடை நீக்கம் செய்யப்படுகிறார்கள்.
கூண்டோடு காலிசெய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள்
கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் 146 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டார்கள். நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது வெட்டிச் சுருக்கப்படுகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். அதே போல நாட்டினுடைய முக்கியமான சட்டங்கள், மசோதாக்கள் எல்லாம் முறையான விவாதம் இல்லாமலே நாடாளுமன்றத்தில் அதிரடியாக, அராஜகமாக நிறைவேற்றப்படுகின்றன.
சில நேரம் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு நேரமில்லை என்று சொன்னால், நாடாளுமன்றத்தில் துறை ரீதியான நிலைக்குழுக்கள், மற்ற பல கமிட்டிகள் உள்ளன; அந்த கமிட்டிகளிடம் மசோதாக்களை ஒப்படைப்பார்கள். அதைக்கூட இந்த அரசு செய்யவில்லை.
பாஜகவின் ‘ஆள் தூக்கிச் சட்டங்கள்’
அதேபோல குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்புடைய விசயத்தில் பல்வேறு தாக்குதல்கள் நடந்துள்ளன. ஏராளமான கருப்புச் சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. ‘உபா’ போன்ற ஆள் தூக்கிச் சட்டங்கள் வந்துள்ளன. இதன் மூலம் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்; விசாரணை இல்லாமல், ஜாமீன் இல்லாமல் வருடக்கணக்காக ஒருவரை சிறையில் அடைக்க முடியும். இப்படிப்பட்ட சட்டங்களைக் கொண்டு வந்து மாற்றுக்கருத்து சொல்பவர்களை கைது செய்கிறார்கள். குறிப்பாக சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்களை எல்லாம் சிறையில் தள்ளும் பயங்கரம் நடந்து கொண்டிருக்கிறது.
மோடியின் பக்தகோடிகளான ஊடகங்கள்
ஊடக சுதந்திரம் என்பது மட்டுப்படுத்தப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது. தேசிய அளவிலான பல தொலைக்காட்சிகள், ஊடகங்கள் மோடி அரசைப் பற்றி ஒரு வரி கூட விமர்சனம் செய்ய எவ்வளவு தயங்குகிறார்கள், எப்படியெல்லாம் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறோம்.
அந்த தேசிய தொலைக்காட்சிகள் எல்லாம் மோடியினுடைய பக்தகோடிகளாக மாறிவிட்ட அவலத்தைப் பார்க்கிறோம். தொலைக்காட்சி சேனல்களின் உரிமையாளர்கள் மோடி அரசாங்கத்தால் மிரட்டப்படுவதன் காரணமாக இந்த மாற்றங்கள் அரங்கேறுகின்றன. எனவே முக்கிய தொலைக்காட்சிகள் இந்த அரசைப்பற்றி ஒரு வரி கூட விமர்சனமோ, மாற்றுக்கருத்தோ சொல்ல முடியாத சூழலை பாஜக அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது.
ராமர் கோவில் தலைமை பூசாரியான மோடி!
ஜனநாயகத்தின் மீது மோடி அரசு நடத்திய தாக்குதலுக்கு சற்றும் குறைந்ததல்ல மதச்சார்பின்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள். எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் இந்திய அரசு ஆதரிக்கக்கூடாது என்று இந்திய அரசியல் சாசனம் வரையறுத்துள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் இந்திய அரசு சாய்மானமாக இருக்காது என்பதை அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் பாஜக ஆட்சியில் இந்த கோட்பாடு முற்றாக மீறப்பட்டுள்ளது. அதனுடைய உச்சகட்டமாகத்தான் ஜன.22இல் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடந்தது. அங்கு தலைமைப் பூசாரியாக இந்த நாட்டின் பிரதமரே வேலை பார்த்தார்.
பாஜகவின் வாக்குச்சாவடி ராமர் கோவில்
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை ராமர் கோவில் திறப்பை ‘பக்தி’ என்ற அடிப்படையில் பார்க்கவில்லை. மாறாக தேசத்தின் ஒரு முக்கியமான அடையாளமாக ராமர் கோவிலை முன் வைக்கிறார்கள். தேசிய உணர்வுகளின் அடையாளம் ராமர் கோவில் என்று சித்தரிக்க முனைந்தார்கள். ராமர் கோவில் திறப்பு என்பது தேசம், மதம், அரசு - இந்த மூன்றும் ஒன்றோடொன்று கலக்கப்பட்டு ஆபத்தான கலவையாக நம் முன் வைக்கப்பட்டுள்ளது. இதை கவலையோடு பார்க்க வேண்டியுள்ளது. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் மக்களை பாஜகவினர் அழைத்து வருகிறார்கள். ராமர் கோவில் பாஜகவின் மிகப்பெரிய வாக்குச் சாவடியாக மாற்றப்பட்டுள்ளது. பாபர் மசூதி இருக்கும் போதே அதற்கு எதிரான பிரச்சாரம், பின்னர் பாபர் மசூதி இடிப்பு, அதற்கு பிறகு ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, அடுத்து கட்டி முடித்து ராமர் கோவில் திறப்பு - இது முற்றிலும் இந்துத்துவாவின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி.
இந்திய குணாம்சத்தை மாற்ற முயற்சி
ராமர் கோவில் திறக்கப்பட்ட “ஜன.22 அன்று தான் உண்மையிலேயே இந்தியா விடுதலை பெற்றுள்ளது; ஆகஸ்ட் 15இல் பெற்றது உண்மையான விடுதலை அல்ல; ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான அடிமைத்தனத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்றிருக்கிறது” என்கிற கருத்தை விடாமல் அவர்கள் முன் வைத்ததை நாம் பார்க்க முடிந்தது. இந்த அடிப்படையில் இந்திய அரசியலின் அடிப்படை குணாம்சத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். ராமர் கோவில் திறப்பு குறித்து மோடி பேசியது, ஆர்.எஸ்.எஸ். நபர்கள் பேசியது எல்லாம் நாடாளுமன்றத்தில் தீர்மானங்களாகவும் நிறைவேற்றப்பட்டன. இதை பெரும் கவலையோடு பார்க்க வேண்டியுள்ளது.
இந்துக்கள் அல்லாதவர்களின் கதி என்ன?
இவ்வாறாக இவர்கள் உருவாக்க முனையும் இந்து ராஷ்டிரத்தில் இந்து அல்லாதவர்களின் கதி என்ன, நிலைமை என்ன? என்றால் அவர்கள் முழுமையான - அனைத்து உரிமைகளும் பெற்ற குடிமக்களாக இருக்க மாட்டார்கள். அது இஸ்லாமியர்களாக இருக்கலாம், கிறிஸ்துவர்களாக இருக்கலாம். இந்து ராஷ்டிரத்தில் இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்படுவார்கள்.
மதவெறி - கார்ப்பரேட் கூட்டணி
மோடி ஆட்சி, ‘இந்துத்துவா வகுப்புவாத கார்ப்பரேட் கூட்டணி’ என்பதை நாம் அம்பலப்படுத்த வேண்டும். ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் எல் அண்டு டி கம்பெனிக்கு கொடுக்கப்பட்டது. நாங்கள் நாட்டுக்காக இலவசமாக இந்த கோவிலைக் கட்டிக் கொடுத்தோம் என்று அந்த நிறுவனம் கூறிக்கொண்டது.
ராமர் கோவிலுக்கான வடிவமைப்பை டாடா குழுமம் செய்து கொடுத்தது. துவக்க நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள பெரும் கார்ப்பரேட் தொழில் அதிபர்கள் எல்லாம் ஆஜர் ஆகி இருந்தார்கள். இந்துத்துவா வகுப்புவாதமும், கார்ப்பரேட் நிறுவனங்களும் எப்படி கைகோர்த்து இணைந்து இந்த ஆட்சியில் உள்ளனர் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
பெரும் நாசத்தைச் சந்திக்கும் ஏழைகள்
மோடி அரசு தான் நவீன தாராளமயக் கொள்கைகளை மிக தீவிரமாக அமலாக்குகிறது என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் நம்புகின்றன. கார்ப்பரேட் சந்தைக்கு அது உதவும் என்று நம்புகிறார்கள். பாஜக கடைப்பிடிக்கும் கொள்கையால் மிகப்பெரிய பயனாளிகளாக கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் உள்ளன. இதன் காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் அதீதமாக வளர்ந்துகொண்டே போகிறார்கள். இந்த 10 ஆண்டுகளில் அம்பானி, அதானியின் சொத்துக்கள் பல மடங்கு அதிகரித்து உள்ளன. இந்த தாராளமய கொள்கைகள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவுகிறதே தவிர, சாதாரண ஏழை மக்களுக்கு பெருத்த நாசத்தை ஏற்படுத்துகிறது.
எதிர்க்கும் மாநில அரசுகளை ஒடுக்கும் மோடி
தங்களை எதிர்க்கிற எதிர்க்கட்சிகளை ஒடுக்குகிற எதேச்சதிகாரத்தில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களை கவிழ்கிற வேலையைச் செய்கிறது பாஜக அரசு. கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதைப் பார்த்தோம். மகாராஷ்டிராவில் சிவசேனாவில் ஒரு பகுதியினரை விலைக்கு வாங்கி அந்த அரசுகளை கவிழ்த்தார்கள். எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களை கவிழ்க்க மோசமான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறது பாஜக அரசு. கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அரசுகளை கவிழ்க்க முடியவில்லை என்பதனால் நிதிவெட்டு, மறுப்பு மூலமாக மூச்சடைக்க வைத்து ஒடுக்குகிற வேலையைச் செய்கிறது.
மோடி அரசை வீழ்த்த களமிறங்குவீர்!
பாஜகவின் இந்த போக்குகளை எதிர்க்க நாடு முழுவதும் உள்ள 28 கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கின. பாஜகவிற்கு எதிரான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் ஒருமுகப்படுத்த வேண்டும். அதற்காக மாநில அளவில் மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு புரிந்துணர்வுக்கு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த அடிப்படையில்தான் ‘இந்தியா அணி’ உதயமாகியுள்ளது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிக்கு தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட கிடைக்காமல் முற்றாகத் துடைத்தெறிய வேண்டும். அதற்காக மார்க்சிஸ்ட் கட்சி களம் காணும்.
இவ்வாறு பிரகாஷ் காரத் பேசினார்.
அவரது ஆங்கில உரையை மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மொழி பெயர்த்தார்.
இப்பேரவைக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் வரவேற்றார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் என்.பாண்டி, எஸ்.கண்ணன், கே.பாலபாரதி, செ.முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொகுப்பு : இலமு