tamilnadu

img

அஞ்சல்துறை தேர்வு தமிழில் எழுத அனுமதி பெற்றுத் தந்த சு. வெங்கடேசனுக்கு பாராட்டு

தமிழில் அஞ்சல் துறை தேர்வு எழுத அனுமதி பெற்றுத்தந்த சு. வெங்கடேசனுக்கு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின்
மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில், தபால் சேவை
கணக்கர் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத முடியும் என
மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, இத்தேர்வுகள் தமிழிலும் நடத்தப்பட
வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற
உறுப்பினர் சு. வெங்கடேசன், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு கடிதம்
எழுதியதன் விளைவாக தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தமிழக தேர்வர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாகும்.
இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதோடு, மத்திய அரசின்
கவனத்திற்கு உரிய முறையில் கொண்டு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்களுக்கு
பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதேபோன்று, மத்திய அரசின் பணி நியமனங்களுக்கான அனைத்து
தேர்வுகளையும் தமிழில் எழுதுவதையும் மத்திய அரசு உறுதி செய்ய
வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

;