tamilnadu

img

பள்ளிக்குச் செல்வதே எங்களுக்கு மகிழ்ச்சி... தமிழ்நாடு அறிவியல் இயக்க கள ஆய்வில் குழந்தைகள் ஏக்கம்...

சென்னை:
கொரோனா பெருந்தொற்று பள்ளிக் கல்வியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்துதமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய நேரடி கள ஆய்வு முடிவுகள் அடிப்படையில் தமிழ்நாடுஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள ஆய்வு முடிவுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.சுப்பிரமணி, மாநிலத்தலைவர் முனைவர் எஸ்.தினகரன், மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி, மேனாள் மாநிலத்தலைவர் முனைவர் என்.மணி (கல்வி ஆய்வுக்குழு), முனைவர் என். மாதவன் (கல்வி ஆய்வுக்குழு), மாநிலச்செயலாளரும் மாநில ஒருங்கிணைப்பாளருமான எஸ்.டி.பாலகிருஷ்ணன் (கல்வி கள ஆய்வு), மாநிலச்செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், மாநிலச்செயலாளர் எம்.தியாகராஜன், மாநில துணைத்தலைவர் முனைவர்.சுகுமாரன் ஆகியோர்  செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெளி யிட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:
2021 ஜூலை 10, 11 ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தன்னார்வலர்கள் மூலம் 35 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கள ஆய்வு 2137 மாணவர்களிடம் நடத்தப்பட்டது. கல்வியாளர்களால் 60க்கும் மேற்பட்ட கேள்விகள் உருவாக்கப்பட்டு கள முன்பரிசோதனை செய்யப்பட்டது. ஒரு மாவட்டத்திற்கு 2 முதல் 3 ஒன்றியங்கள், அப்பகுதியில் உள்ள கிராமம் மற்றும் நகரப்பகுதிகளைத் தேர்வு செய்து ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு கிராமத்திற்கு 10முதல் 20 மாணவர்கள் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. தன்னார்வலர்களாக அறிவியல் இயக்க ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், இளம் ஆய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஜூலை 10, 11 தேதிகளில் சுமார் 162 பகுதிகளில் 202 தன்னார்வலர்கள், 2137 மாணவர்களி டம் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஒரு மாணவரை ஆய்வு செய்ய 25 நிமிடங்கள் என்ற அடிப்படையில் 800 மணி நேரம் ஆய்வுப் பணி நடைபெற்றது.ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை 20 விழுக்காடு, ஐந்தாம் வகுப்பு முதல்எட்டாம் வகுப்பு வரை 69 விழுக்காடு, எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 89 விழுக்காடு, ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் 11 விழுக்காட்டினர் ஆய்வில் பங்கேற்றனர்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
2019-20 தொடங்கி 2021 -2022 வரையுள்ள காலத்தில் அரசுப் பள்ளிகளில் 5 விழுக்காடு  மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதேகாலகட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 7 விழுக்காடு குறைந்துள்ளது. 11 விழுக்காட்டு மாணவர்கள் மேல் வகுப்புக்கு செல்லவில்லை. இது பள்ளி இடைவிலகல். ஆனால் பள்ளிகள் திறந்த பிறகு இந்தஎண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது. 

குழந்தை தொழிலாளர்கள்
2.96 விழுக்காடு மாணவர்கள் தற்காலிக  குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர். 60 விழுக்காடு மாணவர்கள் ரூ.100 க்கும் கீழே சம்பளம் வாங்குபவர்கள். 10 விழுக்காடு மாணவர்கள் / குழந்தை தொழிலாளர்கள் 8 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்கின்றனர். அதிகபட்சமாக சேவைத் துறை பணிகளில் தான் 54 விழுக்காடு மாணவர்கள் ஈடுபட்டு உள்ள னர்.28 விழுக்காடு  குழந்தைகள் வேலைக்கு செல்லாமல், வீட்டில் தாய்-தந்தையர் மற்றும் பாதுகாவலருக்கு உதவியாக உள்ளனர். 72 விழுக்காடு குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது பெரும்பகுதி நேரத்தை விளையாட்டில் கழிக்கின்றனர். தொலைக்காட்சி பார்ப்பதில் 39 விழுக்காடு மாணவர்கள் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர். 18 விழுக்காட்டினர் வீடியோ விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 38 விழுக்காடு மாணவர்கள் பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படாமல் இருப்பதால், ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு இருப்பதாக உணர்கின்றனர். 47 விழுக்காடு படிப்பறிவு உள்ள பெற்றோர்கள், தங்கள் குழந்தை களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர்.

பாதுகாப்பற்ற பெண் குழந்தைகள்
45 விழுக்காடு பெற்றோர்கள், தாய்-தந்தைஇருவரும் வேலைக்கு செல்லும் சூழ்நிலையில், பள்ளி செல்லா விட்டால் தங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதுகின்றனர். ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெற்ற மாணவர்கள் விகிதம் 49 விழுக்காடு.ஆன்லைன் வகுப்புகளுக்கு 60 விழுக்காடு மாணவர்கள் செல்போன் மூலம் மட்டுமே பங்கேற்க முடிகிறது. கல்வி தொலைக்காட்சியை  மட்டுமே பார்ப்போர் 41 விழுக்காடு. கல்வி தொலைக் காட்சியில் நடத்தும் பாடங்கள் புரிகிறது என்று 
கூறியவர்கள் 44 விழுக்காடு. இணைய வழியில் கற்க முயற்சி செய்தும் தொடர் இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவோர் 54 விழுக்காடு. 65 விழுக்காடு மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை கடந்த ஓராண்டில்  சந்தித்து உள்ளனர்.
75 விழுக்காடு மாணவர்கள் பாடப் பொருள் சார்ந்தும், 52 விழுக்காடு மாணவர்கள் விலையில்லா பொருட்களுக்காகவும்  தங்கள் ஆசிரியர்களை  சந்தித்ததாக கூறியுள்ளனர். 10 விழுக்காடு மாணவர்கள் விலையில்லா பொருட் களை வாங்க இயலவில்லை. காரணம் வெளியூர்சென்றதும்  தகவல் கிடைக்கப் பெறாமையும் ஆகும். அரசு வழங்கியுள்ள பாடப் புத்தகங்களை 69 விழுக்காடு மாணவர்கள் படித்துப்பார்த்து உள்ளனர். இன்றைய பெற்றோர்கள் 11 விழுக்காடு மட்டுமே எழுத்தறிவு அற்றவர்கள்.64 விழுக்காடு பெற்றோர்கள் கூலி வேலைசெய்பவர்கள். பெருவாரியான பெற்றோர் களுக்கு வாரத்தின் எல்லா நாட்களிலும் வேலை கிடைக்கிறது. வாரத்தின் 7 நாட்களும் வேலைசெய்யும் ஆண்கள் 18 விழுக்காடு. பெண்கள் 8  விழுக்காடு. பெருவாரியான ஆண்கள் மற்றும்பெண்கள் மாதம் ரூ.5000-க்கு கீழே வருவாய் ஈட்டுகின்றனர்.‌

பள்ளிக்கு செல்வதே மகிழ்ச்சி
பெருந் தொற்றால் பள்ளி செல்ல இயலாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று 82 விழுக்காடு மாணவர்கள் கூறுகின்றனர். 95 விழுக்காடு மாணவர்கள் பள்ளி திறந்ததும் செல்லத் தயாராக உள்ளனர். 5 விழுக்காடுமாணவர்கள் பள்ளி செல்ல விரும்பாவில்லை என தெரிவித்துள்ளனர். 12 விழுக்காடு மாணவர்கள் பள்ளிகள் திறக்கப்படும் போது பள்ளி செல்ல தடைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதில் கொரோனா அச்சம் பெரும் பங்கு வகிக்கிறது. பள்ளியே மகிழ்ச்சிதரும் இடமாக இருக்கிறது என்று 77 விழுக்காடு மாணவர்கள் கூறியுள்ளனர்.41 விழுக்காடு மாணவர்கள் நீண்ட இடை வெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் போது, குறைந்த பாடங்களே இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். 28 விழுக்காடுமாணவர்கள் விளையாட்டுகள் அதிகம் இடம் பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர். 14 விழுக்காடு மாணவர்கள் கொஞ்சம் நாட்கள் பாடம் இல்லாத வகுப்புகள் வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

26 விழுக்காடு மாணவர்கள் கொரோனா பாதிப்புக்கு தக்க பாதுகாப்பு வசதிகள் வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இணைப்பு வகுப்பு பயிற்சிகள் வேண்டும் என 12 விழுக்காடு மாணவர்கள்  தெரிவித்துள்ளனர். மகிழ்ச்சியான போதனை முறைமைகள் வேண்டும் என்று 26 விழுக்காடு மாணவர்கள்  தெரிவித்துள்ளனர். இந்த எல்லாம் சேர்ந்து இருக்க வேண்டும் என 39 விழுக்காடு மாணவர்கள்  தெரிவித்துள்ளனர். 5 விழுக்காடு மாணவர்களின் குடும்பங்கள் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளன. 1.1 விழுக்காடு மாணவர்களின் குடும்பங்களில் கொரோனா தொற்று பாதிப்பில் இறப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு முன் வைக்கும் கோரிக்கைகள்
கொரோனா  பெருந்தொற்று காலத்தில்  பள்ளி மேல் வகுப்பிற்கு செல்லாமல் 10 விழுக்காடு மாணவர்கள் விடுபட்டுள்ளனர்.  தற்போதைய நிலையில் இதனை பள்ளி இடை விலகல்என்றே கருத இடமுள்ளது. அதேபோல், 14 வயதுக்கு கீழே குழந்தை தொழிலாளியாக மாறிவிட்ட மாணவர்கள் எண்ணிக்கை 13 விழுக்காடு. பள்ளிகள் திறக்கப்படும் போது பள்ளி செல்ல தடையேதும் உள்ளதா என்ற கேள்விக்கும் ஆம் இருக்கிறது என்று 12 விழுக்காடு மாணவர்கள் பதிலளித்துள்ளனர். குழந்தை தொழிலாளியாக இருக்கும்  மாணவர்கள், தற்காலிக இடைநிறுத்தம் ஆன மாணவர்கள், மீண்டும் பள்ளி செல்வதில் பிரச்சனை இருக்கிறது என்று கூறும் மாணவர்கள் ஆகிய அனைவரையும்,  பள்ளிகள் திறக்கப்படும் போது, பள்ளி சேர்ந்து விட்டார்களா ? என்பதை கண்காணிக்க உத்திகளை அரசு வகுக்க வேண்டும். கோவிட் 19 பெருந் தொற்றுக் காரணமாக ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலை அல்லதுஒரு பள்ளியில் இருந்து இன்னோரு பள்ளிக்குமாறிச்  செல்ல வேண்டும் என்பது கூட அறியாமல்  பள்ளி இடை விலகல் உள்ளனர். 14 வயதுக்கு கீழே உள்ளவர்கள் வயதுக்கு ஏற்ற வகுப்பில் இணைக்கப்பட வேண்டும். 

கள ஆய்வு முடிவுகளின் படி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 5 விழுக்காடு அதிகரித்து உள்ளது. அதேசமயம், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 7 விழுக்காடு மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு வந்துள்ள மாணவர்கள், மீண்டும் தனியார் பள்ளிகளுக்கு திரும்பாத வண்ணம், பள்ளிக் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் மாணவர் விகிதம்,தரமான கல்விக்கான கற்றல், கற்பித்தல் முறைகள் ஆகியவற்றில் பள்ளிச் செயல்பாடுகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், தற்போது நம்பிக்கையோடு பள்ளியில் சேர்ந்துள்ள குழந்தைகள் மற்றும் புதிதாக அரசுப் பள்ளிகளுக்கு வருவோருக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும். எனவே, அரசு இந்த விசயத்தில்  கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.ஆன்லைன் வகுப்புகளில் 49 விழுக்காடுமாணவர்கள் மட்டுமே பங்கு பெறுகிறார்கள். அதுவும் கூட எப்போதாவது பங்கேற்பவர்களை யும் உள்ளடக்கியதே. கல்வி தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள் 41 விழுக்காடு. அதிலும்  44 விழுக்காடு மாணவர்களுக்கு அது புரியவில்லை.

எனவே, இணைய வழிக் கல்வி, கல்விதொலைக்காட்சி கல்வி ஆகியவை எல்லா மாணவர்களுக்கும் சென்று சேரும் வகையில் இதனை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.பள்ளியில், முட்டையோடு தொடர்ச்சியாக சத்துணவு சாப்பிட்டு வந்த  குழந்தைகளின் பெற்றோரில்  38 விழுக்காட்டினர், சத்துணவு சாப்பிடாமையால் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைந்து இருக்கலாம் என்ற கருத்தை ஒத்துக் கொள்கின்றனர்.கற்றல் கற்பித்தல் நடைபெறா விட்டாலும்,முட்டையோடு கூடிய சமைத்த சத்துணவு குழந்தைகளுக்கு  சென்று சேர்வதை அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும். இதனை ஆங்காங்கே இருக்கும் அங்கன்வாடி மையங்கள் மூலம் கூட அரசு நடைமுறைப்படுத்த திட்டமிடலாம்.  மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் காலகட்டத்தில், தொடக்க நிலையில் குறைந்த அளவிலான பாடங்கள், விளையாட்டு வழி செயல்பாடுகள், திட்டமிட்ட பாடங்கள் இல்லாதவகுப்புகள், பாதுகாப்பான வகுப்பறைகள், இணைப்பு வகுப்புகள் இப்படி பல ஆலோச னைகளை மாணவர்கள் கூறியுள்ளனர். இதனை பள்ளிக் கல்வித் துறை கல்வியாளர்கள் கல்வி செயல்பாட்டாளர்களை அழைத்துப் பேசி ஒரு புதிய வடிவத்தை முடிவு செய்ய லாம். 

கொரோனா தொற்று காரணமாக 1.1 விழுக்காடு மாணவர்கள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் குடும்பங்களுக்கு கொடுக்கும் நிவாராணத்தோடு, இந்தக் குழந்தைகள் படிப்பை முடிக்கும் வரை ஒரு சிறப்பு கல்வித் உதவித் தொகை மூலம் படித்து முன்னேற்றம் அடைய அரசு உதவி செய்ய வேண்டும். கொரோனா பெருந்தொற்று முதல் அலை தொடங்கி தற்போது வரை பாதிக்கப்படாத கிராமங்கள் ஏராளமாக இருக்கின்றன. அங்கு செயல்படும் பள்ளிகள் இருக்கின்றன. எனவே,பள்ளித் திறப்பை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான அளவீட்டை கையாலாமல், மாவட்டம்,  வட்டாரம் என பகுப்பாய்வு செய்து அதன் அடிப்படையில், பள்ளிகளை திறக்க வேண்டும். இதற்கு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலும் முக்கியம்.பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிப்பது பள்ளித்திறப்பு மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு உறுதுணையாக அமையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;