திருச்சி:
தமிழகத்தில் 307 இடங்களில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்சென்னையில் இருந்து திருச்சி மண்டலத்திற்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் புதனன்று அதிகாலை வந்தடைந்தன. அந்த மருந்துகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த தடுப்பூசி மருந்துகள் தகுந்த குளிர்பதன முறையில் பராமரிக்கப்பட்டு புதுக் கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தடுப்பூசி வாகனங்களை அமைச்சர் கொடியசைத்து அனுப்பி வைத்தார். பிறகு விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் வருகிற 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் அதேநேரத்தில் தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவைக்கிறார்.
14 வது நாளில் நோய் எதிர்ப்பு சக்தி
முதற்கட்டமாக தமிழகத்திற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ் செவ்வாயன்று சென்னை வந்தடைந் தது. உடனடியாக அவை மண்டல அலுவலகங்களுக்கு குளிர்பதன முறையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தடுப்பூசியை பொறுத்தமட்டில் முதல் தடுப்பூசி போட்ட 28-வது நாள் இரண்டாவது தடுப்பூசி (டோஸ்) போடவேண்டும். இரண்டாம் தடுப்பூசி போட்ட 14-வது நாள்தான் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். முதல் தடுப்பூசி போடப்பட்டதில் இருந்து 48 நாட்கள் கழித்து தான் நோய் எதிர்ப்பு சக்தி வரும் என்று ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. முதல் கட்டமாக தடுப்பூசி போடுபவர்கள் போட்ட உடனேயே மது அருந்தக்கூடாது.
307 இடங்களில் தடுப்பூசி
தமிழகத்தில் இந்த தடுப்பூசி போடுவதற்கு முன்னதாக ஒத்திகை, ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் திட்டமிட்டபடி தமிழகத்தில் 307 இடங்களில் கொரோனா தடுப்பூசி வருகிற16-ந்தேதி முதல் தினமும் 100 பேருக்கு போடப்படும். தடுப்பூசியால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. தடுப்பூசி பற்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரிச்சார்த்த முறையில் தடுப்பூசி போட்டு பரிசோதித்து, ஆய்வும் செய்துள்ளோம்.
பக்கவிளைவுகள் இல்லை
கொரோனா தடுப்பூசியால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. எனவே தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம். இந்த தடுப்பூசி மூலம் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நானும் முன் மாதிரியாக தேவைப்பட்டால் அனுமதி பெற்று தடுப்பூசி போட தயாராக இருக்கிறேன்.இப்போது கூட இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா பரவி வருகிறது. ஆஸ்பத்திரியில் படுக்கைகள் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 3 சதவீதமாக இருக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் 1.2 சதவீதமாக இருக்கிறது. இது மிகப் பெரிய வெற்றி. இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளே ஆச்சரியப்படும் அளவுக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.வலுவான சுகாதார கட்டமைப்பு மற்றும் முதல்வரின் போர்க்கால நடவடிக்கை, திட்டமிடுதல்களால் இன்று கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.