tamilnadu

img

ரயில்வே துறையில் உ.பி.யைச் சேர்ந்தவர்கள் சென்னையில் நியமனம்! சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களை உடனடியாக நியமிக்க சிபிஎம் வலியுறுத்தல்

ரயில்வே துறையில் சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
வடகிழக்கு ரயில்வே வாரியம் 2018ல் உதவி ரயில் ஓட்டுனர் காலியிடங்களுக்கும் டெக்னீசியன் காலியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரியிருந்தது. தெற்கு ரயில்வேயில் 761 உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரி இருந்தது. விண்ணப்பதாரர்கள் ஒரு ரயில்வேக்கு தான் விண்ணப்பிக்க முடியும். எந்த மொழியில் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். எந்த ரயில்வேக்கு தேர்வு எழுதுகிறார்களோ அந்த ரயில்வேக்கு தான் அவர்கள் நியமிக்கப்பட வேண்டும். வேறு ரயில்வேக்கு அவர்கள் நியமிக்கப்படக் கூடாது.

ஆனால், உத்தரப்பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரும் தெற்கு ரயில்வேயில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் மதிப்பெண்கள் தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை விட குறைவானதாகும். ஒரு ரயில்வே வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்னொரு ரயில்வே வாரியத்தில் நியமிக்கப்படக்கூடாது என்பது தெளிவாக இருந்தும், கோரக்பூரில் தேர்வானவர்களை சென்னையில் நியமித்தது சட்ட விரோதமாகும். இது தென் மாநில ரயில்வே விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்பை பாதிப்பதோடு, ஜனநாயக அமைப்பை சீர்குலைப்பதாகவும் இருக்கிறது. இது குறித்து எங்களது கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.

எனவே, இப்பிரச்னையில் ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு கோரக்பூர் விண்ணப்பதாரர்களை கோரக்பூருக்கு திருப்பி அனுப்பவும், தென் மாநில ரயில்வேயின் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை அந்த உதவி ஓட்டுனர் காலியிடங்களில் உடனடியாக நிரப்ப வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

;