ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை பிற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பகிர்ந்தளித்தது.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் (சமர்க்கார சிக்ச அபியான்) கீழ் 2024-25 ஆம் ஆண்டிற்குத் தமிழ்நாட்டிற்கு ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ஒன்றிய அரசின் பங்களிப்பான ரூ.2,152 கோடியில், முதல் தவணையாக ரூ. 573 கோடியை ஜூன் மாத்திலேயே விடுவித்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. மாறாக, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும், புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் உடனே விடுவிக்கப்படும் என நிர்ப்பந்திக்கப்பட்டது.
தேசியக் கல்விக் கொள்கை 2020 கால அட்ட வணைப்படி 2030க்குள் தற்போது உள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைப்பதாகும். அதற்காக மாநில அரசுகளை பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கி; படிப்படியாகத் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் முதன்மை நோக்கம் மாநில அரசுகளால் சமூகநீதியின் அடிப்படையில் உருவான கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பதே ஆகும். இந்த நிலையில், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை வழங்க மறுத்த ஒன்றிய அரசு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்தது.