tamilnadu

img

தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய பட்ஜெட்

தமிழ்நாட்டை புறக்கணித்தும், ஏழை, எளிய மக்கள் மீது கொடூரமான புதிய வரிகளை விதித்தும், முதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளித் தந்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 (இன்று) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)லிபரேசன் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் மறியல் போரை நடத்துகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ள இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிபிஐ(எம்எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி உள்ளிட்ட தலைவர்கள் தலைமையேற்கின்றனர். 

2024-25 பட்ஜெட்டில், பாஜக ஆட்சி செய்யாத அனைத்து மாநிலங்களையும் ஒன்றிய அரசு பழி வாங்கியுள்ளது; வஞ்சித்துள் ளது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரள மாநிலங்களை முழுமையாக பழி வாங்கியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணி 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்று 2021-ஆம் ஆண்டு பட்ஜெட்டிலேயே ஒன் றிய பாஜக அரசு அறிவித்தது. கொரோனா காலம் என்பதையும் மீறி, உள்துறை அமித் ஷா  அடிக்கல் நாட்டினார். ஆனால், மூன்றாண்டு களாக ஒரு ரூபாயைக் கூட ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. தற்போதைய பட்ஜெட்டிலும் இந்த வஞ்சனை தொடர்கிறது.

கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிப்பதைப் பற்றியும் பட்ஜெட்டில் மூச்சே விடவில்லை! தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலை திட்டம்  உட்பட தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே அறிவிக்கப் பட்டுள்ள ரயில்வே திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப் படவில்லை. ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்த ஒரு புதிய ரயில் திட்டங்கள், நெடுஞ்சாலைத் திட்டங்கள் இடம்பெறவில்லை.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டை இரண்டு முறை புயல்கள் தாக்கின. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் கடும் இயற்கைப் பேரி டர்களைத் தமிழ்நாடு சந்தித்தன. இதற்கு நிவா ரணமாக, 37 ஆயிரத்து 907 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு கொடுத்தது. ஆனால், ஆண்டு தோறும் வழக்கமாக சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய 276 கோடி ரூபாய் நிதியை மட்டும் அளித்து விட்டு, ஒன்றிய அரசு வஞ்சித்தது.அதேநேரம், உத்தரகண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்கள் மட்டுமின்றி, பீகார் மாநிலத்திற்கு மட்டும் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பேரிடர் தடுப்பு பணிகளுக்காக வழங்கப்படும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. பீகாரின் கோசி நதி வெள்ளத் தடுப்புக்கு 21 ஆயிரம் கோடி ஒதுக்குகிற ஒன்றிய அரசு, தமிழக வெள்ளப்பாதிப்புக்கு நிதி ஒதுக்க வில்லை.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையைக் கொண்டு வந்து, மாநிலங்களின் வரி  விதிப்பு உரிமையை ஒன்றிய பாஜக அரசு  அபகரித்தது, ஒருபுறமென்றால், மறுபுறத்தில் வரி இழப்பீட்டுத் தொகையாக தமிழ்நாட்டிற்கு தர  வேண்டிய ரூ. 20 ஆயிரம் கோடியையும் இன் னும் வழங்கவில்லை. மாநிலங்கள் முத்திரைத் தாள் கட்டணம் மூலம் வருவாய் ஆதாரத்தை ஈட்டும் நிலையில், அந்தக் கட்டணத்தை குறைப் போம் என்றும் மாநிலங்களை கலந்து ஆலோசிக் காமலேயே தன்னிச்சையாக பட்ஜெட்டில் அறிவித்துளளது.

பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில், அடுத்த 5 ஆண்டுகளில், 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதில், வீடற்ற குடும்பங்களுக்கு ஒன்றிய அரசின் பங்காக தலா ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வீடு கட்டித் தர வேண்டும் என்பது கோரிக்கை. ஆனால், வீடுகளுக்கான மதிப்பீட்டினை உயர்த்துவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. தற்போது, நகர்ப்புறப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு ஒன்றிய அரசின் பங்கு 1.5 லட்சம் ரூபாயாக மட்டுமே உள்ளது. அதேநேரம் மாநில அரசு சுமார் 12.14 லட்சம் ரூபாயை ஒரு வீட்டிற்கு செலவிட வேண்டியுள்ளது. அந்தச் சுமையும் தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் மீது ஏற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் வகையில், இருபது ஆண்டு களுக்கும் மேலாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ திட்டத்திற்கு, வழக்கமாக விடுவிக்கப்பட வேண்டிய நிதியைக் கூட மோடி அரசு நிறுத்தி வைத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவோம் எனக் கையெழுத்து போட்டால்தான் நிதியை விடுவிப்போம் என்று அடம்பிடிக்கிறது.

கடந்த 10 ஆண்டுகால ஒன்றிய பாஜக ஆட்சியில் உட்கட்டமைப்பிற்கு மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கிய நிதியை காட்டிலும் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி மிகமிகக் குறைவு. இந்த பட்ஜெட்டிலும் அதுவும் இல்லை.  வாரணாசியை விட 10 மடங்கு அதிகமாக பயணிகள் பயணம் செய்கிற விமான நிலையம் மதுரை விமான நிலையம். ஆனால், அதனை 24 மணி நேரம் முழுவதுமாக இயக்க முடியவில்லை. சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க ஒன்றிய அரசு தயாரில்லை.

தமிழ்நாட்டிலிருந்து ஒரு ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரியாக சென்றால் 29 காசுகள்  மட்டுமே திரும்ப வருகிறது. ஆனால், பாஜக ஆட்சி செய்யும் உ.பி.க்கு 2 ரூபாய் 73 காசுகள் வழங்கப்படுகிறது.