tamilnadu

img

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்...

சென்னை:
ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு  எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள். மனித உரிமை மீறல்கள், பாலியல் கொடுமைகள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்திய அரசு, இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.இலங்கையில் நடந்த போரில் அநீதி இழைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. சர்வதேச அளவில் நம்பகத்தன்மை கொண்ட எந்தவொரு விசாரணைக்கும் இலங்கை அரசு தயாராக இல்லை. ஏற்கனவே ஐ.நா. மன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளிலிருந்தும் இலங்கை அரசு விலகிக் கொண்டது. இந்நிலையில், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் 6 நாடுகளின் சார்பில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் இந்திய அரசு நிலைபாடு எடுக்குமானால் அது அநீதிக்கு துணை போவதாகவே அமையும். இதுவரை இந்தியா எடுத்து வந்த நிலைப்பாட்டுக்கும் எதிராக இருக்கும்.எனவே, போர்க் குற்றவாளிகளை இன்றுவரை பாதுகாத்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும். அதுவே குறைந்தபட்ச நியாயமாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

;