சென்னை: கொரோனா காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்திருந்தது . அதன்படி , மாணவர்களுக்கு பத்து மற்றும் பதினோராம் வகுப்பு மதிப்பெண்களும் , பன்னிரண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண்களையும் வைத்து , பன்னிரண்டாம் வகுப்பிற்கான மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டது . அம்மதிப்பெண்களில் திருப்தியில்லாத மாணவர்களுக்கு , தனித்தேர்வர்களாகப் பிரித்து துணைத்தேர்வு நடத்தப்படுவதாகவும் அறிவித்திருந்தது .
இந்நிலையில் , தனித்தேர்வத்திற்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்குத் துணைத்தேர்வு நடத்த இன்று (31 .07.2021) நுழைவு சீட்டு வழங்கப்படுகிறது. தனித்தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் , இன்று வழங்கும் நுழைவு சீட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் உஷாராணி அறிவித்திருக்கிறார் .
விண்ணப்ப எண் இல்லாத காரணத்தினால் நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்ய இயலாத மாணவர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் மையங்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார் .