tamilnadu

img

மோடியின் திருச்சி வருகையால் யாருக்கு லாபம்?

சென்னை விமான நிலையத்திற்கு அடுத்ததாக வருவாயில் 2வது இடத்தில் திருச்சி விமான நிலையம் உள்ளது. 2022-23 நிதியாண்டில் 50 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இந்திய அளவில் பன்னாட்டு விமானநிலைய பட்டியலில் 11வது இடத்தில் திருச்சி விமான நிலையம் உள்ளது.  இந்நிலையில், சுமார்  1112 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருச்சி விமானநிலையத்தின் 2-ம் முனையம் கட்டப்பட்டுள்ளது. அதனைத் திறந்து வைக்கவே பிரதமர் மோடி இன்று (ஜனவரி 2) வருகிறார்.

இந்த விமானமுனையத்தை வடிவமைத்திரு ப்பது இந்திய நிறுவனம் அல்ல. அது லண்டன் நிறுவனம். ‘மேக் இன் இந்தியா‘ என்பதும் பொய்யானது. விமானநிலையத்தின் நுழைவாயில் ஶ்ரீரங்கம் கோயில் கோபுரம் போன்று உரு வாக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 750 கார்கள், 250 டாக்சிகள், 10 பேருந்துகளை நிறுத்தி வைக்கும் அளவுக்கு பார்க்கிங் வசதிகள்.

 ஒரே சமயத்தில் 2,900 பயணிகள் வரை  பயன்படுத்தும் வகையில் இந்த விமானநிலை யமானது கட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 75 ஆயிரம் சதுர மீட்டரில் இந்தச் சர்வதேச முனையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படு கிறது. அதற்காக சோலார் பேனல்கள் கூரை  மீதாக பொருத்தப்பட்டுள்ளன. இது ஒரு ‘க்ரீன் ஏர்போர்ட்.’  நான்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விமானநிலையம் இது.

இது வெப்பத்தை வெளியிடாது. கழிவுநீரை வெளியிடாது. இங்குப் பயன்படுத்தப்படும் மின்சாரமானது நக ரத்திற்குத் தேவையான மின்சாரத் தேவையைப் பாதிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  திருச்சியிலிருந்து, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவூதி அரேபியா  என 10 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நேரடியாக விமானங்கள் மற்றும் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு உள்நாட்டு விமானங்களும் தினசரி  இயக்கப்படுகின்றன.

தற்போது, 8,000 அடியாக உள்ள ரன்வேயின் அளவு, 12 ஆயிரம் அடியாக அதிகரித்தால் தான், ஏர்பஸ்-330, 747-போயிங் போன்ற பெரிய ரக விமானங்களை இயக்க முடியும். திருச்சி விமான நிலையம் விரிவாக்கப் பணிக்காக, 512 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்திற்காக சுமார் 512 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. 512 ஏக்கர் நிலத்தில், சதுப்பு நிலங்கள் மற்றும் தனியார் நிலங்கள் உட்பட 312 ஏக்கர், மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டது. சுமார் 200 ஏக்கர் ஒன்றிய அரசின் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான  நிலம் உள்ளது. அதற்கு இணையான மாற்று இடத்தை மாநில அரசு வழங்க வேண்டுமென்ற நிபந்தனையுடன் நிலம் வழங்க ஓப்பந்தம் ஏற்பட்டு கையகப்படுத்தப் படவுள்ளதாக கூறப்படுகிறது.

 இந்த விமானமுனையத் திறப்பு விழாவுக்காக திருச்சியே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது. மோடியின் சாதனையைப் பாரீர் என காவிக்கூட்டம் கம்பெடுத்து சுற்றத் துவங்கியுள்ளது.  கடந்த ஆண்டு திருச்சி விமான நிலையம் ஆண்டிற்கு 15 லட்சத்திற்கு மேற்பட்ட பயணி களை கையாண்டுள்ளதாக அறிக்கைகள்  தெரிவிக்கின்றன.

இதில் 80% பயணங்கள் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங் களை சார்ந்த இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக அயல் நாடுகளுக்கு வேலைக்காக பயணம் மேற்கொண்டதும் தாயகம் திருப்பியதும் தான். உண்மை நிலை இப்படி இருக்க, இதில் பெருமை என்ன இருக்கிறது? இத்தனை வசதிகளுடன் திறக்கப்படும் திருச்சி விமான முனையத்தின் மீது, ‘அதானிக்கு தாரை வார்க்கப்படும்’ என்ற கத்தி தொங்கிக் கொண்டிருப்பது எளிதில் கடந்து செல்லக்கூடி யது அல்ல! ஏனென்றால், மத்திய விமான போக்கு வரத்துத் துறை, அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் 13 விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முடிவில் இறங்கியுள்ளது.

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airports Authority Of India) நிர்வாகம் செய்து வரும் 13 விமான நிலையங்களை 6 பிரிவுகளாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம் இந்த விற்பனையில் 6 பிரிவுகளில்,  லாபம் அளிக்கும் ஒரு விமான நிலையமும்  நஷ்டம் அளிக்கும் ஒரு விமான நிலையத்தையும் இணைத்து அதிரடி ஆஃபர் விற்பனை செய்ய மோடி அரசு முடிவெடுத்துள்ளதாம்.

உதாரணமாக 2020 ஆம் நிதியாண்டில் திருச்சி விமான நிலையம் 22.85 கோடி ரூபாய் லாபம் அளித்த நிலையில், சேலம் விமான நிலையம் 8.76 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாம்; லாபத்தையும் நஷ்டத்தையும் இணைத்து விற்க ஏற்பாடு எனத் தெரிகிறது.