சென்னை, ஜூன் 23- சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. வழக்கமாக 55 முதல் 60 லாரிகளில் தக்காளி குவிந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக 45 லாரிகளாக குறைந்ததால் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கியது.
கடந்த 10நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனையில் ரூ.45-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக தக்காளியின் விலை திடீரென அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரையிலும் விற்கப்படுகிறது.
இதேபோல் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த பீன்ஸ் விலை சற்று குறைந்து மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.150-க்கும், அவரைக்காய் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை உயர்ந்து உள்ளதால் அதன்பயன்பாட்டை பெண்கள் குறைத்து உள்ளனர்.
தக்காளி விளைச்சல் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்று வட்டாரங்களில் உள்ள ஜம்பு குட்டப்பட்டி,குள்ளனூர், மடத்தனூர் மேக்கலாம்பட்டி, கோட்டானூர் பகுதிகளில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் தக்காளி பயிரிட்டுள்ளனர். தற்போது தக்காளி கிலோ ரூ.90 வரை விற்கப்படும் நிலையில் நன்றாக வளர்ந்து வந்த தக்காளி செடிகள், தக்காளி பழங்கள் திடீரென காய்ந்தும் சுருங்கி வெம்பியும் காணப்படுகிறது. போதிய விளைச்சல் இல்லாமல் தக்காளி செடியும் கடும் பாதிப்பு அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.