tamilnadu

சென்னை உள்பட 18 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூன் 22- வெப்ப சலனம் காரணமாக சென்னை உள்பட 18 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேடசந்தூரில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. ஊட்டி தேவாலாவில் 4 செ.மீ., பெரியாறு, நடுவட்டம் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

;