tamilnadu

img

100 நாள் வேலை திட்டத்தில் 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பணி மறுக்கக்கூடாது.... ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்...

 சென்னை:
 “நூறுநாள் வேலை திட்டத்தில் 55 வயதிற்கு மேற்பட்டோருக்கு பணி தரக்கூடாது என்ற உத்தரவை திரும்ப பெற்று அனைவருக்கும் வேலை வழங்கிடவும் -  வேலை நாட்களை 200 ஆக அதிகரிக்க வேண்டுமெனவும் - இத்திட்டத்தினை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்திட வேண்டுமெனவும்” வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெள்ளியன்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  அக்கடிதத்தின் விபரம் வருமாறு:

கொரோனா நோய்த் தொற்று மற்றும் ஊரடங்கு  காலத்தில் கிராமப்புற ஏழை, எளிய மக்கள் வேலைவாய்ப்பு இன்றி கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நூறு நாள் வேலைதிட்டத்தில் 55 வயது மேற்பட்டவர்களுக்கு வேலை தரக்கூடாது என்று தமிழக அரசின் உத்தரவு இத்திட்டத்தில் பணிபுரியக்கூடிய 55 வயதுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய கிராமப்புறத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும்அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் உருவாக்கியுள்ளது.

நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்கள் இந்த கொரோனா காலத்தில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு பணிபுரிய வேண்டும் என்று தமிழக அரசு கருதினால் அது ஏற்புடையதே. ஆனால் நல்ல உடல் பலம் உள்ளவர்களைக் கூட 55 வயதை கடந்து இருந்தால் அவர்களுக்கு பணி தரக்கூடாது என்ற உத்தரவு ஏழை, எளிய மக்களுக்கு பெரும் சிரமத்தை தான் ஏற்படுத்தும்.எனவே, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேலை தரக் கூடாது என்ற அரசின் உத்தரவை உடனடியாக திரும்ப பெற்று அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும்.

#   ஆண்டுக்கு 50 நாட்களுக்கு மட்டுமே தற்போது வேலை வழங்கப்படுகிறது. இதனை 200 நாட்களுக்கு வேலை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

#   பேரூர், நகர்ப்புற ஏழை, எளிய மக்களுக்கு பயன்தரக் கூடிய வகையில் இத்திட்டத்தை பேரூராட்சி களுக்கும் விரிவுபடுத்திட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை   அமைச்சர் அவர்கள் பரிசீலித்து கிராமப்புற, நகர்ப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

;