குறு சிறு தொழில்கள் கோவிட் காலத்தில் எதிர் கொள்ளும் இன்னல்கள், அரசின் மீட்பு திட்டங்கள் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய
குறு சிறு தொழில்கள் அமைச்சர் நாராயண ரானே பதில் அளித்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள சிறு குறு தொழில்கள் சந்திக்கிற பிரச்சினைகள் பின்வருமாறு
திட்டங்களின் பலன் என்ன?
'இந்திய தொழிலகங்களின் ஒருங்கிணைவு' ( Consortium of Indian Associations) 81000 தொழிலகங்களில் நடத்திய ஆய்வில் 88 சதவீதமான சுய தொழில், குறு சிறு தொழில்களுக்கு ஒன்றிய அரசு அறிவித்த மூன்று மீட்பு திட்டங்களின் பயன்கள் சென்றடையவில்லை என்று முடிவுகள் வெளியாகின. இது போன்ற ஆய்வை அரசு செய்துள்ளதா? செய்திருந்தால் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன? என்ற கேள்விகளை (நாடாளுமன்ற கேள்வி எண் 551/ 22.07.2021) நான் எழுப்பியிருதேன்.
இதற்கு பதில் அளித்த ஒன்றிய குறு சிறு தொழில்கள் அமைச்சர் நாராயண ரானே, மீட்புத் திட்டங்கள் மீது எந்த ஒரு ஆய்வும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஐந்து முக்கியப் பிரச்சினைகள்
ஆனால் தேசிய சிறு தொழில் கழகம், காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் ஆகிய அமைப்புகள் பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நிறுவனங்கள் எவ்வாறு பேரிடர் காலத்தில் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன என்பதை ஆய்வு செய்து அளித்துள்ள தகவல்களை அளித்துள்ளார்.
91 சதவீத நிறுவனங்கள் செயல்பட்டுள்ளன. ஆனால் ஐந்து முக்கியப் பிரச்சினைகளை அவை எதிர் நோக்கி உள்ளன. நிதி நீர்மம் 55% நிறுவனங்களிலும், புதிய ஆர்டர்கள் 17% க்கும், தொழிலாளர்கள் பிரச்சினை 9% லிலும், கச்சாப் பொருள் பற்றாக்குறை 8% லிலும் பிரச்சினைகள் ஆக உள்ளன என்று தேசிய சிறு தொழில் கழக ஆய்வு தெரிவி்த்துள்ளது.
88% பாதிப்பு
காதி மற்றும் கிராமத் தொழில் ஆணைய ஆய்வு முடிவுகளின்படி 88% பயனாளிகள் தாங்கள் கோவிட் காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 12 % பயன் பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
காதி மற்றும் கிராமத் தொழில் ஆணைய ஆய்வு முடிவுகளின்படி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் 88% நிறுவனங்களில் 57% நிறுவனங்கள் பேரிடர் காலத்தில் தங்கள் தொழில்களை சில காலம் மூட வேண்டி வந்தது எனவும், 30 % நிறுவனங்கள் உற்பத்தி, வருவாய் சரிவை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளன.
நாங்கள் பயன் பெற்றோம் எனக் கூறும் 12 % நிறுவனங்களில் 65 % தாங்கள் சுகாதார துறை மற்றும் சில்லறை வியாபாரம் சார்ந்தவை எனத் தெரிவித்துள்ளன.
சம்பளம் கிடைத்ததா?
47 சதவீத நிறுவனங்கள் மட்டுமே சம்பளத்தை முழுமையாக கொடுத்தவர்கள்; 42 சதவீத நிறுவனங்கள் சம்பளத்தை பகுதியாக கொடுத்தவர்கள்; 11% சம்பளமே தராதவர்கள் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பெரும்பாலான பயனாளிகள் கூடுதல் நிதி உதவி தேவை என்றும், வட்டி தள்ளுபடி தேவை எனவும், சந்தைப்படுத்த அரசின் ஆதரவு தேவை என்றும் தெரிவித்துள்ளன.
சு.வெங்கடேசன் எம்.பி
"அமைச்சர் தெரிவித்துள்ள இரண்டு ஆய்வுகளுமே சுய தொழில், குறு சிறு தொழில் நிறுவனங்கள் படும்பாடுகளை விவரிக்கிறது. ஆனால் மீட்புத் திட்டங்களின் தாக்கம் பற்றி எந்த ஆய்வும் அரசின் தரப்பில் செய்யப்படவில்லை என்று அமைச்சர் கூறி இருப்பது வருத்தம் அளிக்கிறது. அரசின் திட்டங்கள் செயலாக்கம் குறித்த ஆய்வுகள் இல்லாவிடில் எப்படி உரிய வகையில் பயன்கள் போய்ச் சேரும்" .
"அரசு உடனே குறு சிறு தொழில்களைப் பாதுகாக்க தலையிட வேண்டும்" என்று கேட்டுக்கொள்கிறேன்.