ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் நில பிரபுத்துவ கோட்டையைத் தகர்க்கும் உளிகளாக ஏராளமான தலைவர்கள் களம் கண்டுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவராக மகத்தான தலை வர் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி திகழ்கிறார்.
ஒன்றுபட்ட திருத்துறைப்பூண்டி தாலுகாவில் விளத்தூர் பாங்கல் கிராமத்தில் சாத்தன்- அமிர்தம் ஆகிய பண்ணை அடிமைத் தம்பதியினரின் மகனாகப் பிறந்தார் தனுஷ்கோடி. அன்றைய காலகட்டத்தில் நில உடைமை முறை வழக்கப்படி சிறுவன் தனுஷ்கோடி பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படாமல் மாடு மேய்க்கும் வேலைக்கு அந்த கிராமத்தின் பண்ணைக்கு அனுப்பப் பட்டார். சிறுவனான தனுஷ்கோடி, பண்ணை அடிமைகளின் வாழ்க்கைக்கு விடியல் கிடைக்காதா? இப்படியே தான் வாழ வேண்டுமா? என ஏங்கிக் கொண்டிருந்த தனுஷ்கோடி க்கு 1942-ஆம் ஆண்டு நம்பிக்கை ஒளிக்கீற்றாய் நற்செய்தி கிடைத்தது; சீனிவாசராவ் என்ற ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் தஞ்சை மாவட்டத்திற்கு வந்திருக்கிறார் என்ற உற்சாகமிக்க அந்த செய்தி, அவருக்கு புதிய நம்பிக்கை அளித்தது.
தோழர் சீனிவாசராவ் அவர்களை களப்பால் கிராமத்திற்கு சென்று சந்தித்தார். உண்மையான மகிழ்ச்சி யை அவர் உணர்ந்தார். பி.சீனிவாச ராவ் அவர்களின் எழுச்சிமிகு உரை தனுஷ்கோடியையும் அவருடன் வந்தவர்களையும் தட்டி எழுப்பியது.
அன்று முதல் கூலி உயர்விற்கான போராட்டம், பண்ணை யடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டம் என தஞ்சை மாவட்டத்தில் அவர் நடத்திய போராட்டங்கள், போகாத கிராமங்களே இல்லை எனும் அளவிற்கு, தஞ்சைத் தரணியின் போராட்டத் தளபதிகளில் ஒருவராக செங்கொடி இயக்கத்தில் மிளிர்ந்தார்.
(இன்று - 19.08.2024) தோழர்.பி.எஸ்.தனுஷ்கோடி நினைவு தினம்