4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் சென்னை மக்களை அதிர வைத்துள்ளது.
சென்னை திருமுல்லைவாயில் உள்ள அந்தோணி நகரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் கணவர் பணிக்கு சென்று விட அவரது மனைவி, 4 வயது மகள், 8 வயது மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து மாலையில் தனது மகனை டியூசனுக்கு அழைத்து சென்ற தாய், சிறுமியை மட்டும் வீட்டில் தனியாக விட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த அவர், வீட்டில் தனது 4 வயது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதையடுத்து வீட்டினுள் இருக்கும் கழிவறையில் இருந்த வாளிக்குள் ஒரு சாக்கு மூட்டை இருந்தது. அதை பிரித்து பார்த்த போது, அதற்குள் சிறுமி சடலமாக கிடந்தார். உடனடியாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இந்நிலையில் பக்கத்து வீட்டில் உள்ள உறவினர் மீனாட்சி சுந்தரம் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். அப்போது விசாரணையில், அவர் குழந்தையின்பெரியப்பா என்பதும், அவரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும் தெரியவந்தது. 60 வயதான அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.