மத்திய அமைச்சரவையால் இறுதி செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பென்சன் திட்டம் குறித்து இன்னும் முழு விவரங்கள் தெரியவில்லை.
ஓய்வூதிய அமைச்சக அலுவலக அறிவிக்கை வெளிவருவதற்காகக் காத்திருக்கிறோம். ஊடகங்களில் வெளியான அறிவிப்பு மற்றும் நிதியமைச்சர் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும்போது நாடாளுமன்றத்தில் கூறியவற்றின் அடிப்படையில் நாங்கள் கீழ்க்கண்ட கருத்துக்களைத் தருகிறோம்:
1) பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் இரண்டுக்கும் இடையேயான பாகுபாடு - முக்கியமாக, அடிப்படை ஊதியம் + பஞ்சப்படி ஆகியவற்றின் மீது 10% பிடித்தம் செய்வது என்ற வடிவத்தில் தொடர்கிறது. ஒவ்வொரு மாதமும் 10% பிடித்தம் என்பது, வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது நிதியமைச்சர் நிதி மேலாண்மையில் மதி நுட்பம் (Fiscal Prudence) பேணப்படும் என்று கூறியதை எதிர்மறையாகக் கடைப்பிடிக்கும் போக்கையே குறிக்கிறது. எனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்கும் போராட்டம் தொடரும்.
2) 12 மாத அடிப்படை சராசரியில் அடிப்படை பென்சன், 25 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு 50% மற்றும் இதற்குக் குறைவாக 10 ஆண்டுகள் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு பணிக்காலத்திற்கு ஏற்ப சதவிகிதக் குறைப்பு என்ற முடிவு மற்றொரு எதிர்மறையான அம்சமாகும். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 10 மாத சராசரி அல்லது கடைசி மாத ஊதியம், எது அதிகமோ அது கருத்தில் கொள்ளப்படும். மேலும் அரசால் செயல்படுத்தப்பட்ட 6-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரையின்படி, 25 ஆண்டுகள் பணி மற்றும் 10 ஆண்டுகள் வரை குறைவான பணி என்ற வகையிலான பாகுபாடு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இல்லை. எனவே புதிய நிலைப்பாட்டிற்கு எதிரான போராட்டம் தொடரும்.
3. அமலாக்கத் தேதி 1.4.2025 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தேதிக்கு முன் ஓய்வு பெற்ற மற்றவர்கள் நிலை என்ன?
4. 60% குடும்ப ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில், மரணமுற்ற அல்லது ஓய்வு பெற்ற நாள் இரண்டில் எது முந்தையதோ அதிலிருந்து,10 ஆண்டுகளுக்கு முழு ஓய்வூதியம் தொடரும். மாறாக இத்திட்டத்தில் ஓய்வூதியத்தில் 60% மட்டுமே குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்! மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள 80, 85, 90, 95 மற்றும் 100 ஆண்டுகளுக்குப் பிறகான காலமுறைப் புதுப்பிப்பு எங்கே?
5. ஒவ்வொரு ஊதியத் திருத்தத்திற்குப் பிறகும், மத்திய ஊதியக்குழு பரிந்துரைத்த சூத்திரத்தின்படி ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் மேம்படுத்தப்படும். ஆனால் இப்போது அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இந்த மேம்படுத்தல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
6. ஒன்றிய அரசின் இந்த முடிவும் கூட, போராட்டங்கள் மற்றும் அரசியல் நிர்ப்பந்தங்களால் எடுக்கப்பட்டதே. அப்படியிருந்தும், விவேகமான நிதி மேலாண்மை என்ற பெயரில் 10% பிடித்தத்தை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
7. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி இல்லாத, பாதகமான அனைத்து அம்சங்களையும் முடிவுக்குக் கொண்டுவர, போராட்டங்களை முன்னெடுப்போம்.