tamilnadu

img

சிலம்பத்தை கற்பியுங்கள்... இளைஞர்களுக்கு சங்கரய்யா வேண்டுகோள்...

வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டிய தியாகமும், அர்ப்பணிப்பும் மிக்க பெருவாழ்வு வாழும் மகத்தானதலைவர் என்.சங்கரய்யாவின் 100வது பிறந்த தினத்தை தமிழகம் முழுவதும் கொண்டாடுவது என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தீர்மானித்தது. அதனடிப்படையில் பல்லாயிரக்கணக் கான இளைஞர்கள் பங்கேற்ற ஏராளமான நிகழ்வுகள் மாநிலம் முழுவதும் நடைபெற்றுள்ளன.

மத்திய சென்னை
இப்பூவுலகை எதிர்கால சந்ததிகளுக்கு பசுமை வாழ்க்கையை உறுதி செய்திட  வாலிபர் சங்க, மாணவர் சங்க மாவட்டக் குழுக்கள் சார்பாக“பசுமை ஓட்டம்” நிகழ்ச்சி காலை 9 மணிக்கு வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா துவக்கிவைத்தார். தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பில் இருந்து ஜி. சுந்தர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இளைஞர்களும், மாணவர்களும் இயற்கை வளங்களைபாதுகாக்க உறுதி மொழி ஏற்றனர்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த ரத்ததான முகாமில் 37 பேர் ரத்த தானம் செய்தனர், இடுவாய் ஊராட்சிகளில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. 

செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம், இந்தலூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 100 இளைஞர்கள் பங்கேற்ற ரத்ததான முகாம் நடைபெற்றது.

கோயம்பத்தூர்
அன்னூரில் 100 மரக்கன்றுகள் நடும் விழாவின் பகுதியாக அன்னூர் பேரூராட்சி 15 ஆவதுவார்டு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

திருச்சி மாநகர் 
வாலிபர் சங்க மலைக்கோட்டை பகுதிக்குழுதாராநல்லூர் பகுதியில் புதிய கிளை கொடியேற்று விழா மற்றும் துவக்க விழா நடைபெற்றது.

இராமநாதபுரம் 
உறுதி மொழி நிகழ்வு, ஏராளமான விளம்பரபதாகைகள் வைக்கப்பட்டன, இனிப்பு வழங் கப்பட்டது. தமிழகம் முழுவதும் உத்வேகத்தோடு நடைபெற்ற நூற்றாண்டு நிகழ்வுகளின் உற்சாகத் தோடு என்.சங்கரய்யாவை சந்திக்க சங்க மாநிலசெயலாளர் எஸ்.பாலா, மாநிலக்குழு உறுப்பினர்செல்வராஜ் உடன் அவரது வீட்டிற்கு சென் றோம்.

உற்சாகமான சந்திப்பு
அப்போது கலைஞர்கள் உற்சாகமாக பறையடித்து பொய்க்கால் நடனமாடி தோழர் சங்கரய்யாவை வாழ்த்தி கொண்டிருந்தனர். அவரும் உற்சாகத்தோடு கைகளை அசைத்து அன்பைவெளிப்படுத்தினார். காலையிலிருந்து தலைவர்களின் வருகை தோழர்களின் எழுச்சிகரமான சந்திப்பு என வயது நூறு பிறந்தாலும் இளைஞனாக எங்களுக்கு காட்சியளித்தார். அந்த உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொண்டது.

வாலிபர் சங்கத்தின் மரியாதை
தோழர் என்.சங்கரய்யாவை வணங்கி வாழ்த்துக்களை பரிமாறும் விதமாக அவர் என்றைக்கும் நேசிக்கக் கூடிய கைத்தறித் துண்டுஅளித்தோம். வாலிபர் சங்கத்தின் சார்பில் வந்துள்ளோம் என்று சொன்னவுடன் அவரின் முகத்தில்உற்சாகம் கூடியது. அவரின் அன்பை பெற்றுக் கொண்ட தருணத்தில் சில நிமிடங்கள் பேசுவதற்கான அரிய வாய்ப்பு கிட்டியது.

உறுப்பினர் பதிவு உயர வேண்டும்
முதலில் வாலிபர் சங்கத்தின் உறுப்பினர் பதிவுகேட்டார். நாம் ஏழு லட்சம் என்று சொன்னதுடன் பாராட்டிவிட்டு, உறுப்பினர் பதிவை அதிகமாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் பாக்கியம் அவரிடம் கரகாட்டக் கலைஞர் பொன்னுத் தேவர் அவர்களின் கலை நிகழ்வுகள் மதுரையில் பிரச்சாரத்திற்கு முன்பாக நடைபெறும். 70 ஆண்டுக்கு முன்பு நடந்த வரலாற்று விஷயங்களைக் குறிப்பிட்டு சொன்னார்.தமிழகம் முழுவதும் வாலிபர் சங்கம் சார்பில் நடைபெறக்கூடிய பேரிடர் கால நிவாரண பணிகளை சொன்ன போது மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டார். தோழர் என்.சங்கரய்யா தன்னுடையநூறாவது பிறந்த தின வாழ்த்துச் செய்தியில் “கொரோனா பெருந்துயரக் காலத்தில்மக்களுக்கு மகத்தான சேவை செய்து வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மிகுந்தபாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என்நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். என குறிப்பிட்டிருந்தார். அதனை நாம் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தோம். தோழர்களின் பணிகள் உற்சாகத்தை தந்துள்ளது இந்த ஆண்டு உறுப்பினர் பதிவு உயரும் என்று சொன்ன போது “கண்டிப்பாக வாலிபர் சங்கத்தின் உறுப்பினர் பதிவை உயர்த்த வேண்டுமென அன்பான கட்டளையிட்டார்”.

சிலம்பம் பயிற்சி நடத்துங்கள்
அதன்பின்பு மதுரையில் நடைபெற்ற சிலம்புபயிற்சி மாணவர்களின் நிகழ்ச்சியை குறிப்பிட்டபோது “சிலம்பத்தை கற்பிக்கும் பணியை வாலிபர்சங்கம் செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண் டார். அத்துடன் மதுரையில் நடைபெறக்கூடிய சிலம்ப வகுப்பிற்கு யார் ஆசிரியர் என கேட்டு அறிந்து கொண்டார். அதற்கு வாலிபர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் வடிவேல் அவர்களது முயற்சியுடன் ஐந்து இடங்களில் ஏராளமான பேருக்கு சிலம்பம் பயிற்சி தந்து வருகின்றனர். உடனடியாக எந்தெந்த இடங்களில் என கேட்டு தெரிந்து கொண்டார். குறுகிய நேரத்தில்வாலிபர் சங்கத்தின் பணிகளை அக்கறையோடு விசாரித்து தனது 100வது வயதில் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல மதிப்புமிக்க வழிகாட்டுதல்களை தந்துள்ளார்.“நல்ல குறிக்கோளை அடைவதற்கு தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது”. என்ற மாமேதை காரல்மார்க்சின் வைரவரிகள் என்பது தோழர். என்.சங்கரய்யாவிற்கு முழுமையாக பொருந்தும். அவரின்
இலட்சிய பாதையிலே, அர்ப்பணிப்புடன் நாமும்பயணிப்போம்.

;