tamilnadu

img

பறிக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள்

நிலம் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானது என்பன நாம் அறிவோம். தலித் மக்களின் சமூக பொருளாதார விடுதலைக்கும் சுயசார்புக்கும் நிலம் அடிப்படையானது.பிரிட்டிஷ் ஆட்சியில் வட தமிழகத்தில் இருந்த ஆதிதிராவிட மக்களின் சமூக - பொருளாதார நிலையை ஆய்வு செய்த பிரிட்டிஷ் அதிகாரி 30.9.1892 ஆம் ஆண்டு அவர்களுக்கு நிலம் வழங்க லண்டன் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் பஞ்சமர்கள் என்று அட்டவணைப்படுத்தப்பட்ட பள்ளர், பறையர், அருந்ததியர் சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கு 12 லட்சம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட நிலங்களில் மிகப்பெருமளவு தற்போது அம்மக்களிடமோ அவர்களின் வாரிசுகளிடமோ இல்லை.
தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கரில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 136 ஏக்கர் நிலம் தான் உள்ளது என்று தமிழக நில நிர்வாகத் துறை ஆணையர் 26.7.2006 அன்று தெரிவித்துள்ளார். இந்த நிலங்களில் பெரும்பகுதி மிகப்பெரிய தொழிலதிபர்கள், தலித் அல்லாத ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியில் மாவட்ட வாரியாக பஞ்சமி நிலம் (ஏக்கரில்) வழங்கப்பட்ட விபரம் பின்வருமாறு,கோயம்புத்தூர் - 1838, கடலூர்- 188.26, தர்மபுரி - 4250, திண்டுக்கல் - 3402.43, காஞ்சிபுரம் - 507.80, கரூர் - 545.72, கிருஷ்ணகிரி - 5749.3, மதுரை - 3096.15, நாகை-8.38, நாமக்கல்-8060.76, பெரம்பலூர்  - 8760.01, சேலம்-4504.14, சிவகங்கை – 21.88, தஞ்சாவூர் - 322.88, நீலகிரி – 3774.46, தேனி 1010.01, திருச்சி – 3420.70, நெல்லை – 2473.88, திருவள்ளூர் - 6602.4, திருவண்ணா மலை – 34,99, திருவாரூர் - 24.8, வேலூர் – 20339.44, விழுப்புரம் – 16446.44 தற்போது தமிழகத்தில் 1,26,013.6 ஏக்கர் நிலம் தான் இருப்பதாக நில நிர்வாகத் துறை கூறியுள்ளது. மீதமுள்ள 10,73,787 ஏக்கர் நிலம் எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை. தமிழக சட்டமன்றத்தில் இடதுசாரிஉறுப்பினர்கள் பஞ்சமி நிலம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கேட்டும் மக்கள் மன்றத்தில் நீண்டபோராட்டங்கள் நடத்தியும் எவ்விதமான பதிலும் இல்லை.

பஞ்சமி நிலங்கள் வருவாய்த்துறை பதிவேட்டில் பட்டியலின மக்களின் பெயரில் தான் உள்ளதா என்பதை 12 முறை பார்வையிட்டு மண்டல வட்டாட்சியர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் 1892 ஆம் ஆண்டுக்குப்
பிறகு யுடிஆர் சர்வே நடைபெற்றது. தமிழகத்தில் 1986ஆம் ஆண்டு மீண்டும் யுடிஆர் சர்வே நடத்தப்பட்டது. அதன்பின்னர் பஞ்சமி நிலம் குறித்த சர்வே நடத்தப் பட்டதா என்ற கேள்விக்கும் இப்போது வரை பதில் இல்லை.உண்மையில், பஞ்சமி நிலங்களில் பெருமளவுக்கு தனியார் முதலாளிகள், உள்ளூர் ஆதிக்க சக்திகள், கல்வி வள்ளல்கள் என புகழப்படும் சாராய வியாபாரிகளும் சுருட்டியுள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வருகிறது. ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பல தொழில் முதலாளிகள் மனை இடங்களாக மாற்றியுள்ளனர். பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான போராட்டம் காலத்தின் தேவையாகும். இடதுசாரி இயக்கங்களும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இக்காலத்தில் பல மாவட்டங்களில் பஞ்சமி நிலத்திற்கான போராட்டங் களை முன்னெடுத்துள்ளது. தஞ்சை மாநாடும் இத்திசை வழியில் இன்னும் வீரியத்தோடு தலித் மக்களின் வாழ்வாதார உரிமையான நிலத்துக்கான, குடிமனைக்கான போராட்டத்திற்கு திட்டமிடுகிறது.

- மு.கந்தசாமி, துணை பொதுச் செயலாளர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி