tamilnadu

img

சிறப்பு பொருளாதார மண்டலம் நில மீட்பு போராட்டம் நடத்துவது ஏன்? என்.செல்லதுரை, மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2007-ஆம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டலம் துவங்குவதற்காக வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தில் விவசாயிகள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தும் போது மாவட்ட ஆட்சியர் சுற்றுச்சூழல் அதிகாரிகள் இந்திய அரசின் பெரு வணிகத்துறை அதிகாரிகள் தமிழக அரசின் தொழிற் வளர்ச்சிக் கழக அதிகாரிகள் ஜிவிகே குழுமத்திலிருந்து நிர்வாக இயக்குனர் சீனிவாசலுரெட்டி துணை இயக்குனர்கள் காந்திதாஸ், சஞ்சய்ரெட்டி மற்றும் சீனியர் இயக்குனர் ஷியாம்பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.  நிலம் கொடுக்கும் கிராமங்களிலிருந்து பஞ்சாயத்து தலைவர்கள் கிராம முக்கியஸ்தர்கள் நிலம் கொடுக்கும் விவசாயிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் பேசிய அதிகாரிகள், பெரம்பலூர் மாவட்டம் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இருக்கிறது. இம்மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லை.  மேலும் இம்மாவட்டத்தில் உள்ளோர் விவசாய வருமானத்தை வைத்தே வாழக் கூடிய நிலைமை உள்ளது. இம்மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டால் நிலம் கொடுக்கும் விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதோடு மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் வேலை கிடைக்கும். பெரம்பலூர் மாவட்டத்திற்கு விமான நிலையம் வரும் அதோடு ரயில்வே இணைப்புத் தடமும் வரும். இம்மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளும் வரும். உலகில் தொழில் வளர்ச்சியில் முன்னேறியுள்ள சிங்கப்பூரை போல பெரம்பலூர் மாவட்டமும் மாறி விடும். விவசாயிகளுடைய வாழ்க்கைத் தரம் உயரும். எனவே நீங்கள் அனைவரும் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்திற்கு உங்களுடைய நிலங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார்கள். அதற்கு விவசாயிகள், நிலம் எங்களுடைய வாழ்வாதாரமாக உள்ளது. நிலத்தை கொடுத்து விட்டால் எங்கள் வாழ்வாதாரம் பாழாகி விடும் என்று அச்சம் தெரிவித்தனர். விவசாயிகளின் அச்சத்தை போக்குவதற்காக வீட்டிற்கு ஒருவருக்கு வேலையும் இலவச வீட்டுமனையும் ஐந்து ஆண்டுகளுக்குள் தருவதாக ஒப்பந்த பத்திரம் பதிவு செய்து கொடுப்பதாக கூறினார்கள்.  இதனை நம்பிய விவசாயிகள் அன்றைக்கு இருந்த அரசும், அதிகாரிகளும் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் நிலங்களை அடிமாட்டு விலைக்கு கொடுத்து விட்டனர். நிலம் கொடுத்து இதுவரை 13 ஆண்டுகளாகியும் வேலையும் கிடைக்கவில்லை. சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. திட்டம் குறித்து அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிலம் கொடுத்த விவசாயிகள் ஏமாற்றப்பட்டு கூலி வேலைக்கு சென்று வாழ்வாதாரத்தை இழந்து பரிதாப நிலையில் உள்ளனர். மூவாயிரம் ஏக்கர் விளை நிலங்களும் முள்புதர் மண்டி தரிசாக கிடக்கிறது. இதனையொட்டி விவசாயிகள் பயிர் செய்து வரும் விளை நிலங்களை வனவிலங்குகள் பயிர்களை நாசம் செய்து விடுகிறது.  இதனால் அப்பகுதியிலுள்ள 10-க்கு மேற்பட்ட கிராம விவசாயிகள் 23.9.2019 அன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளுக்கே வழங்கக் கோரி மனு அளித்தனர். மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 30.9.2019 அன்று நடத்த உள்ள நில மீட்பு போராட்டத்தில் பங்கேற்று நிலங்களை மீட்போம் எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர். மனு அளித்த காரணத்தால் 25.9.2019 அன்று வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து விட்டு கோட்டாட்சியர் பங்கேற்காததால், பேச்சுவார்த்தையை புறக்கணித்து வெளிநடப்பு செய்து சென்று விட்டனர். 26.9.2019 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் நில மீட்பு போராட்டம் குறித்து அனைத்து விவசாயிகள் சங்க நிர்வாகிகளும் வலியுறுத்தினர். அன்றைய தினமே வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தனர். அப்போது ஜிவிகே குழுமம் சார்பில் முடிவெடுக்கக் கூடிய நிர்வாகிகள் வராததால், விவசாயிகள் தரப்பில் இத்திட்டம் ஐந்து ஆண்டுகளுக்குள் செயல்படுத்தவில்லை. எனவே 2013 நிலம் கையகப்படுத்தும் சட்ட விதிகளின்படி நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை ஜிவிகே குழுமத்தினர் ஏற்க மறுத்ததால் விவசாயிகள் தரப்பினர் 30.9.2019 அன்று அறிவித்தபடி நில மீட்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்து சென்று விட்டனர்.  பின்னர் திருமாந்துறை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு சென்று நில மீட்பு போராட்டம் குறித்து தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டு இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம் தலைமையில் நிலங்களில் இறங்கி போராட்டத்தின் மூலம் நிலங்களை மீட்டு விவசாயிகளிடமே ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.