tamilnadu

img

சங்கரய்யாவுக்கு “தகைசால் தமிழர்” விருது.... தமிழக அரசு அறிவிப்பு....

சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த முன்னோடி, சுதந்திரப் போராட்ட வீரர்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு  தமிழக அரசின் “தகைசால் தமிழர்” விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு ஜூலை 28 புதனன்று வெளியிட்டுள்ள  அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும் இந்த விருதுக்கான விருதாளர்களை தேர்வு செய்திட ஒரு குழு அமைக்கவும் தமிழக முதலமைச்சர் சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார்.இந்த விருதுக்கான விருதாளர்களை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும் பணியாற்றியவர். தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவை பெருமைப்படுத்தும் வகையில், இவ்வாண்டிற்கான  “தகைசால் தமிழர்” விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.“தகைசால் தமிழர்” விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட சங்கரய்யாவுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.இவ்வாறு  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                    ********** 

விருதுத் தொகையை கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்

தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருதினை இந்தாண்டுக்கு எனக்கு வழங்குவதாக  தமிழக முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள். எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதிற்காக அளிக்கப்படும் ரூ. 10 லட்சம் தொகையினை கோவிட் 19 - ஆல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் கோவிட் 19 பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், இந்திய நாட்டின் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள்  நலன் காத்திடவும் என்னால் முடிந்தளவு பணியாற்றியுள்ளேன். சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக்கொண்ட மார்க்சியக் கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

என்.சங்கரய்யா

                                    ********** 

மு.க.ஸ்டாலின், முதல்வர்

தமிழினத்துக்கும் மனித சமூகத்துக்கும் அரும்பணியாற்றி அகவை நூறு எட்டியிருக்கும் முதுபெரும் தலைவர் என். சங்கரய்யா அவர்களுக்கு முதல் ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்குவதில் தமிழ்நாடு அரசு பெருமைகொள்கிறது. விருதுத்தொகையையும்  முதலமைச்சர் கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கி உயர்ந்து நிற்கும் தோழருக்கு என் வணக்கங்கள்!

;