ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள ரவிச்சந்திரனுக்கு ஏப்ரல் 16 ஆம் தேதிவரை பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ரவிச்சந்திரனுக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி ஒரு மாதம் பரோல் வழங்கியது.
இதனை தொடர்ந்து அவர் தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்பநாயக்கன்பட்டிக்கு வந்து தங்கி உள்ளார். இதன்பின்னர் அவரது கோரிக்கையை ஏற்று மேலும் 2 முறை தமிழக அரசு பரோல் நீட்டிப்பு வழங்கியது.
இதற்கிடையில். கடந்த பிப்.7 ஆம் தேதி அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உடல்நலக்குறைவால் அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை நடைபெற்றது. மேல் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் அவர் ஊருக்கு திரும்பினார்.
அதனைதொடர்ந்து பிப்.16 ஆம் தேதி பரோல் முடிவடைய இருந்த நிலையில் மார்ச் 16 ஆம் தேதிவரை பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு மீண்டும் இன்று முதல் அடுத்த மாதம் ஏப்ரல்.16 ஆம் தேதிவரை பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.