சென்னை, ஆக. 12 - வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோவில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி ஆகிய நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த கோரிக்கைகளை ஏற்று இதன் அருகில் உள்ள ஊராட்சி, பேரூ ராட்சிகளை இணைத்து புதிய மாநக ராட்சிகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு சட்டப் பேரவை யில் கடந்த 30.3.2023 அன்று அறி வித்திருந்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்துவது தொடர்பாக உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் 4 புதிய மாநகராட்சி களை உருவாக்கும் நடைமுறைகளை தொடங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டு இருந்தார்.
அதன்படி புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநக ராட்சியும், திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணா மலையில் உள்ள பகுதிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சியும், நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை இணைத்து நாமக்கல் மாநகராட்சியும், காரைக்குடி நகராட்சி மற்றும் 2 பேரூராட்சி, 5 ஊராட்சிகளை இணைத்து காரைக்குடி மாநகராட்சியும் உருவாக்கப்பட்டன.
1998-ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி உரிய நடைமுறைகள் பின்பற்றப் பட்டு புதிய மாநகராட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த 4 புதிய மாநகராட்சி களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் திங்களன்று (ஆக.12) காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக் குடி அருகே அமைந்துள்ள உள்ளாட்சிப் பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு அடையும். அது மட்டுமின்றி இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலா பயணிகள், வணிக நிறுவனங்கள் தொழில் நடத்துபவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பாக அமையும் என்று அரசு தெரிவித்துள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு முன்னிலை யில் நடைபெற்ற இந்த விழாவில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி, குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.