tamilnadu

img

பொதுகுடிநீர் குழாய் சேதம்: தட்டிக்கேட்டவரை கட்டி வைத்து தாக்குதல்

உளுந்தூர்பேட்டை, ஏப். 12-ஊரில் பொது குடிநீர் குழாயை அடாவடியாக அடித்து உடைத்து சேதப்படுத்தியவரை தட்டிக்கேட்டவரை அரைநாள் முழுவதும் கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்கியவர் மீது காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநாவலூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது;-திருநாவலூர் காவல் எல்லைக்குட்பட்ட இருந்தை கிராமத்தில் வசிக்கும் ஆரோக்கியசாமி என்பவரின் மகன்களான ஜெயராஜ், எட்வர்ட்ராஜா, பிரிட்டோ ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு ஊரில் இருந்த பொது குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்தி அதிலிருந்து தங்கள் வீட்டிற்கு குடிநீர் பைப் லைன் அமைத்துள் ளனர்.


இதனால் பொது குடிநீர் குழாய்க்கு தண்ணீர் வராமல் பிரச்சனையாகியுள்ளது இதுகுறித்து ஏன் பொது பைப்லைனை துண்டித்தீர்கள் என மேற்கண்ட மூவரையும் இதே கிராமத்தில் வசிக்கும் மரியசூசை மகன் சின்னப்பராஜ் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ஜெயராஜ், எட்வர்ட்ராஜா, பிரிட்டோ மூவரும் சின்னப்பராஜை சம்பவத்தன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தூணில் கட்டி வைத்து அடித்து சித்திரவதை செய்து கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சின்னப்பராஜிக்கு படுகாயம் ஏற் பட்டுள்ளது. அவர் எலும்பு முறிவுடன் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு ஐந்து தினங்கள்வரை முதல் தகவல் அறிக்கை பதியப்படவில்லை. அதன் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டின் பேரில் வழக்கு பதியப் பட்டுள்ளது. குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக இத்தகைய நடவடிக்கை உள்ளதாக தெரிகிறது. எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு எதிரிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

;